மகளிருக்கு இஸ்லாம் கொடுத்த மாண்பு 16-08-23 (பெ.பயான் 01)


THURSDAY, MARCH 3, 2022
மகளிருக்கு இஸ்லாம் கொடுத்த மாண்பு
 
ومن كل شيئ خلقنا زوجين لعلكم تذكرون

ஒவ்வொரு வஸ்துக்களையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்திருக்கிறோம். அதைக் கொண்டு நீங்கள் உணர்வு பெறுவீர்கள். (அல்குர்ஆன் : 51 ; 49)

உலகில் அல்லாஹுத்தஆலா ஒவ்வொரு வஸ்துக்களையும் ஜோடி ஜோடியாக படைத்திருக்கிறான். வானம் பூமி இரவு பகல், உஷ்ணம் குளிர், சூரியன் சந்திரன், வெற்றி தோல்வி, பாக்கியம் அபாக்கியம், நேர்வழி வழிகேடு, ஈமான் நிராகரிப்பு, மனிதன் ஜின், கடல் திடல், ஒளி இருள், வாழ்க்கை மரணம், சொர்க்கம் நரகம், கஷ்டம் இலகுவானது, நன்மை தீமை, இவ்வாறு அதன் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த வகையில் ஆணுக்கு ஜோடியாக எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் பெண்ணைப் படைத்திருக்கிறான். பெண்ணை ஜோடியாக படைத்ததோடு ஆணுக்கு வழங்கியதைப் போன்று அனைத்து விஷயங்களிலும் சம உரிமைகளையும் கண்ணியத்தையும் அந்தஸ்தையும் பெண் சமூகத்திற்கும் வழங்கியிருக்கிறான்.

வருடந்தோறும் மார்ச் 8 International-Womens-Day சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்கள் மதிக்கப்பட வேண்டும், அவர்களுக்குரிய உரிமைகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் சர்வேதச மகளிர் தினம் அனுசரிக்கப்படுவதின் அடிப்படை நோக்கம். இன்றைக்கு அதிகம் பேர் பெண்ணுரிமை குறித்து பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். ஆனால் அவைகளெல்லாம் வெறும் பேச்சோடும் எழுத்தோடும் நின்று விடுகிறதே தவிர அது செயல் வடிவம் பெறுவதில்லை.

நீண்ட காலமாகவே இந்த உலகம் பெண்களை அவர்களும் மனிதர்கள் தான் என்பதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. கி.பி. 586 - ல் ஃபிரான்ஸில் பெண்களின் அந்தஸ்து பற்றி தீர்மானிக்க கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அதிகமான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் பெண்ணும் மனித இனம் தான். ஆனால் ஆண்களுக்கு ஊழியம் செய்வதற்காக படைக்கப்பட்டவர்கள் என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள்.

இதற்கு முன்னதாக ரோமானியர்கள் பெண்களை ஒரு அசுத்த பிராணி என்றனர்.சீனர்கள் பெண்களுக்கு ஆன்மா இல்லை என்றனர்.

 கணவன் மனைவியை கொன்றால் குற்றமில்லை என்று கருதினார்கள். பொதுவாக தந்தைக்கு தன் மகளை கொல்லக்கூடிய உரிமை இருந்தது. 

அரபு நாட்டில் பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கும் பயங்கரம் நடை முறையில் இருந்தது. இது அன்றைக்கு தந்தையின் கௌரவமாக கருதப்பட்டது.

 இதல்லாமல் ஒரு கணவர் இறந்து விட்டால், அவரது உடமைகளை வாரிசுகளுக்கு பங்கிடும் போது அவர் விட்டுச் சென்ற சொத்துப் பட்டியலில் அவருடைய மனைவிமார்களும் இடம் பெற்றிருப்பர். ஆனால் பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் சொத்து இவர்களுக்கு நிராகரிக்கப்பட்டது .

 இன்னும் சிலர்,பெண்ணை யார் கொலை செய்தாலும் அது குற்றச்செயல் அல்ல என்றார்கள்.

இந்தியாவில் கணவர் இறந்து விட்டால், அவரது பிணத்தோடு மனைவியையும் சேர்த்து உயிரோடு உடன் கட்டை ஏற்றி தீயினால் பொசுக்கும் பொல்லாத பாவம் புனிதமாக கருதப்பட்டது. 

அறியாமைக் காலத்து மக்களிடம் இருந்த மிக மோசமான நிலைகளில் ஒன்று பெண் சமூகத்தை இழிவாக கருதுவது. அந்த காலத்தில் மக்கள் பெண் பிள்ளைகளை மிகவும் கேவலமாகவும் இழிவாகவும் கருதி ஈவு இரக்கமில்லாமல் உயிரோடு புதைப்பவர்களாக இருந்தார்கள்.

وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ

يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ

அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறப்பட்டால் அவனுடைய முகம் கறுத்து கோபத்தை விழுங்குகிறான். பெண் குழந்தை பிறந்தது என அவனுக்கு கூறப்பட்ட இந்த கெட்ட நன்மாராயத்தினால் இழிவுடன் அதை வைத்திருப்பதா அல்லது உயிருடன் அதை மண்ணில் புதைத்து விடுவதா என்று கவலைப்பட்டு மக்கள் முன் வராது மறைந்து திரிகிறான். (இவ்வாறு தங்களுக்கு ஆண் குழந்தை என்றும் இறைவனுக்கு பெண் குழந்தை என்றும்) அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டதல்லவா? (அல்குர்ஆன் : 16 ; 58,59)

قال ابن عباس: “كانت المرأة إذا قاربت الولادة حفرت حفرة وتمخضت على رأسها، فإن ولدت جارية رمت بها في الحفرة، وردت عليها التراب، وإن ولدت غلاماً حبسته”،

அறியாமைக் காலத்தில் ஒரு பெண்மனிக்கு பிரசவ நேரம் நெருங்கி குழந்தை உதைக்க ஆரம்பித்து விட்டால் ஒரு குழியைத் தோண்டி விடுவாள். பெண் குழந்தை பிறந்தால் அக்குழந்தையை அதில் போட்டு மண்ணை தள்ளி விடுவாள். ஆண் குழந்தை பிறந்தால் அதை வைத்துக் கொள்வாள் என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள். (தஃப்ஸீர் குர்துபீ)


“இறைத் தூதரே! அந்த அறியாமைக் காலத்தில் என் மனைவி நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்த நேரம். நான் வியாபார விஷயமாகப் பயணம் செல்ல வேண்டிய கட்டம். என் மனைவியிடம், ‘ஆண் குழந்தை பிறந்தால் பத்திரமாகப் பார்த்துக் கொள். பெண் குழந்தை பிறந்தால் கொன்று புதைத்து விடு’ என்று சொன்னேன். பிறகு நான் பயணத்தில் இருந்து திரும்பிய போது மனைவி என்னிடம், ‘நமக்குப் பெண் குழந்தை பிறந்தது. நல்லவேளை அது இறந்து விட்டது’ என்று சொன்னாள்.சில ஆண்டுகள் சென்றன. ஒரு நாள் என் வீட்டிற்கு ஒரு அழகான பெண் குழந்தை வந்து விளையாடுவதைக் கண்டு, ‘யாரவள்?’ என்று திடுக்கிட்டுக் கேட்டேன். அதற்கு என் மனைவி, ‘பக்கத்து வீட்டுக் குழந்தை’ என்றாள். அந்தக் குழந்தை என்னிடம் பழகத் தொடங்கியது. குழந்தைக்கும் எனக்கும் இடையே இருந்த பாசத்தைக் கண்ட என் மனைவி, ‘இந்தக் குழந்தை மீது உங்களுக்கு அவ்வளவு பாசமா?’ என்று கேட்டாள். ‘ஆம்.. இவள் என் உயிரல்லவா?’ என்றேன். அப்போது என் மனைவி, ‘அன்று நான் சொன்னது பொய். இது பக்கத்து வீட்டு குழந்தை அல்ல. நம் குழந்தை தான். உங்களுக்குப் பயந்து நான் அப்படிச் சொன்னேன்’ என்றாள். நான் மகிழ்ச்சியில் நனைந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் அறியாமைக் காலத்து வெறித்தனத்தில் நான், அந்தக் குழந்தையைக் கொல்ல முடிவு செய்தேன். ஆனாலும் பாசம் என்னை விட வில்லை. பாசத்திற்கும், அறியாமைக் கால சிந்தனைகளுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் பாசம் தோற்றது. ஒருநாள் என் அன்பு மகளைப் பாலை வனத்திற்கு அழைத்துச் சென்றேன். என்னுடன் அவள் விளையாடிக் கொண்டும், கதை பேசிக் கொண்டும் இருந்தாள். ஒரு இடத்தில் குழி தோண்டினேன். பாலை வனத்தின் மணல் என் தாடியில் பதிந்தன. அந்தச் செல்ல மகள் ஏதும் அறியாமல், தன் பிஞ்சு விரல்களால் என் தாடியில் உள்ள மணலைத் தட்டி விட்டாள். இறைத்தூதரே! நான் கல்நெஞ்சக்காரன். என் மகளைக் குழியில் தள்ளி மணலைப் போட்டு, உயிரோடு புதைத்து விட்டேன்” என்று நபித் தோழர் சொன்ன போது, நபிகளார் அழ ஆரம்பித்து விட்டார்கள்.அருகில் இருந்த தோழர்கள், அந்தத் தோழரைப் பார்த்து, “என்ன காரியம் செய்தீர்? நபிகளாரையே அழச் செய்து விட்டீரே!” என்ற போது, நபிகள் நாயகம், “அந்தக் காலம் மறைந்து விட்டது. நாம் பாவமன்னிப்பைத் தேடி மீண்டு விட்டோம்” என்று கூறிய வண்ணம் தனது தாடி நனையும் அளவு அழுதார்கள். பின்னர் நபிகள் நாயகம் கூறினார்கள்: “நாம் எவ்வளவு கல் நெஞ்சகர்களாய் இருந்துள்ளோம். (இஸ்லாத்தின் வருகைக்கு முந்தைய) அறியாமைக் காலத்தில் செய்த செயல்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுவான். ஆகவே உமது நற்செயல்களை புதுப்பித்துக் கொள்வீராக!” என்று அத்தோழரைப் பார்த்துக் கூறினார்கள். (அல்வாஃபீ)

உலகம் இன்று விஞ்ஞானம், தொழில்நுட்பம் என எல்லாத் துறைகளிலும் கொடி கட்டிப் பறந்தாலும், பெண்களை இழிவாக, சுமையாக, போகப் பொருளாக பார்க்கும் நிலை நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது.

 முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சியடைகிற இந்த சமூகம் 2 வதாகவோ 3 வதாகவோ பெண் குழந்தைகள் பிறந்தால் மகழ்ச்சியடைவதில்லை. 

மீண்டும் மீண்டும் பெண் குழந்தைகள் பிறந்து விடுமோ என்ற அச்சத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தயக்கப்படக்கூடிய பெற்றோர்களை நாம் பார்க்கிறோம்.

உருவான குழந்தையை கருக்கலைப்பு செய்யும் தாய்மார்கள் இன்றைக்கு அதிகமாகி விட்டார்கள். இதன் காரணமாக நமது நாட்டில் நாளுக்கு நாள் பெண்களின் விகிதாச்சாரம் குறைந்து கொண்டே வருகிறது. 

இன்று ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்கள் மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒரு பெண் உலகத்தில் வாழவே தகுதியில்லாதவள் என்ற அளவிற்கு மிக மோசமாக அன்றைக்கு இருந்த அறியாமைக் காலத்து மக்கள் பெண் சமூகத்தை நடத்தி வந்தார்கள்.அந்த நேரத்தில் தான் இஸ்லாம் தோன்றியது.உலகிலேயே பெண் சமூகத்திற்கு உயர்வையும் கண்ணியத்தையும் ஆணுக்கு நிகரான அந்தஸ்தையும் வழங்கியது இஸ்லாம் தான்.

 பெண்ணியம் குறித்து இஸ்லாம் பேசியது போல் இஸ்லாம் எழுதியது போல் இஸ்லாம் வழிகாட்டியது போல் உலகில் யாரும் பேசியிருக்கவோ எழுதியிருக்கவோ வழிகாட்டியிருக்கவோ முடியாது. அந்தளவு இஸ்லாம் பெண்களை உயர்வு படுத்தி பேசுகிறது.

பெண் பிள்ளைகளை ஸஹாபாக்கள் மிகப்பெரும் அருளாக நினைத்தார்கள், பாக்கியமாக நினைத்தார்கள்.அவர்களை வளர்ப்பதற்கு போட்டி போட்ட நிகழ்வுகளும் அருமை ஸஹாபாக்கள் வாழ்வில் நடந்திருக்கிறது.

فَخَرَجَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، فَتَبِعَتْهُمُ ابْنَةُ حَمْزَةَ: يا عَمِّ يا عَمِّ، فَتَنَاوَلَهَا عَلِيُّ بنُ أبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عنْه، فأخَذَ بيَدِهَا، وقَالَ لِفَاطِمَةَ عَلَيْهَا السَّلَامُ: دُونَكِ ابْنَةَ عَمِّكِ، حَمَلَتْهَا، فَاخْتَصَمَ فِيهَا عَلِيٌّ، وزَيْدٌ، وجَعْفَرٌ، فَقَالَ عَلِيٌّ: أنَا أحَقُّ بهَا وهي ابْنَةُ عَمِّي، وقَالَ جَعْفَرٌ: ابْنَةُ عَمِّي وخَالَتُهَا تَحْتِي، وقَالَ زَيْدٌ: ابْنَةُ أخِي، فَقَضَى بهَا النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ لِخَالَتِهَا، وقَالَ: الخَالَةُ بمَنْزِلَةِ الأُمِّ، وقَالَ لِعَلِيٍّ: أنْتَ مِنِّي وأَنَا مِنْكَ، وقَالَ لِجَعْفَرٍ: أشْبَهْتَ خَلْقِي وخُلُقِي، وقَالَ لِزَيْدٍ: أنْتَ أخُونَا ومَوْلَانَا.

நபி ஸல் அவர்கள் உம்ராவை முடித்து விட்டு மக்காவிலிருந்து வெளியேறிய போது, உஹுதுப் போரில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஹம்ஸா ரலி அவர்களின் மகள் “சாச்சா, சாச்சா!” என்று தனது சிறிய தந்தையான ஏந்தல்  நபி ஸல் அவர்களை நோக்கி ஓடி வந்தாள். தந்தையை இழந்திருந்த அந்தக் குழந்தையை அரவணைத்தார்கள் நபி ஸல் அவர்கள்.

 அச்சிறுமியைப் பார்த்த அலீ ரலி அவர்கள் பரிவோடு அவளுடைய கையைப் பிடித்து தனது மனைவி ஃபாத்திமா ரலி அவர்களிடம், 'இவள் உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை இடுப்பில் சுமந்து கொள்' என்று கூறினார்கள். 

ஆனால் ஸைத் இப்னு ஹாரிஸா ரலி அவர்களும், ஜஃபர் ரலி அவர்களும் அந்த அனாதைச் சிறுமியை, 'நானே வளர்ப்பேன்' என்று ஒருவரோடொருவர் தர்க்கம் செய்தார்கள்.

 அலீ ரலி அவர்கள் 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். இவள் என் சிறிய தந்தையின் மகள்' என்று கூறினார்கள். 

ஜஃபர் ரலி, 'இவள் என் சிறிய தந்தையின் மகள் மட்டுமல்ல இவளுடைய சித்தி அதாவது இவளுடைய தாயின் சகோதரி என் மனைவியாவாள்' என்று கூறினார்கள். 

ஸைத் (ரலி), 'இவள் என் சகோதரரின் மகள்' என்று கூறினார்கள். நபி ஸல் அவர்கள் அச்சிறுமியின் சித்தியின் கணவரான ஜஃபர் ரலி அவர்கள் அவளை வளர்க்கட்டும் என்று தீர்ப்பளித்தார்கள். 'சித்தியே தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள், அதனால் அவள் ஜஃபர் வீட்டுக்குச் செல்வதே சரியாக இருக்கும்' என்று கூறினார்கள். 

பிறகு நபி ஸல் அவர்கள், அலீ ரலி அவர்களை நோக்கி, 'நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்' என்று ஆறுதலாகச் சமாதானப் படுத்தினார்கள்.

 ஜஃபர் ரலி அவர்களை நோக்கி, 'நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்' என்றார்கள்.

 ஸைத் ரலி அவர்களை நோக்கி, 'நீங்கள் எம் சகோதரர். எம்மால் விடுதலை செய்யப்பட்ட, எம்முடைய பொறுப்பிலுள்ளவர்’ என்றும் கூறி அனைவரையும் சமாதானப்படுத்தினார்கள். (புகாரி ; 2699)

பெண் பிள்ளைகளை கேவலமாக, அவர்களை ஒரு பாரமாக நினைத்து அவர்களை ஈவு இரக்கமின்றி உயிரோடு புதைத்துக் கொண்டிருந்த ஒரு சமூகத்தை அவர்களை வளர்ப்பதற்கு நான் நீ என்று போட்டி போடும் சமூகமாக மாற்றினார்கள் அருமை நாயகம் ஸல். போட்டி போட்ட மூன்று பேரில் அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஜஃபர் ரலி அவர்களிடம் ஒப்படைத்ததோடு மீதமிருக்கிற இரண்டு ஸஹாபாக்களுக்கும் ஆறுதல் சொல்கிறார்கள் என்றால் பெண் பிள்ளையை வளர்க்கும் பாக்கியம் கிடைக்காமல் போனது ஆறுதல் சொல்லி தேற்றும் அளவிற்கு மிகப்பெரும் கவலை தரும் விஷயமாக அவர்களுக்கு மாறிப்போனது என்பதை நாம் விளங்கிக் கொள்கிறோம்.

அந்தளவிற்கு பெண் சமூகத்தை இஸ்லாம் உயர்த்திப் பேசுகிறது. இன்றைக்கு உலகில் இஸ்லாத்தைப் பற்றி பல்வேறு வகையில் விமர்சிக்கக் கூடியவர்கள், அவர்கள் சொல்லும் முக்கியமான காரணங்களில் ஒன்று, இஸ்லாம் பெண்களுக்கு எந்த உரிமையையும் வழங்கவில்லை, வீட்டுக்குள் பூட்டி வைத்து அவர்களை அடக்கி வைத்துள்ளது, சமூகத்தில் அவர்களுக்கு எந்த அந்தஸ்தையும் வழங்க வில்லை என்றும் பரவலாக பேசப்படுகிறது.இது அப்பட்டமான பொய் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அல்லாஹ் அருளிய அற்புத வேதமாம் அல்குர்ஆன் ஷரீஃபும்,அண்ணல் நபி ஸல் அவர்களின் மணிமொழிகளும் பெண்களை மனிதர்களாக மதித்து அவர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான மனித உரிமைகளை முழுமையாக வழங்கியுள்ளது மட்டுமல்ல அவர்களுக்கு சமூக அரங்கில் மிக உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளது.

பெண் பிள்ளை பிறந்தால் ஏதோ நடக்கக்கூடாத ஒன்று நடந்ததைப் போல அதை கேவலமாகவும் இழிவாகவும் கைசேதமாகவும் நினைத்த காலகட்டத்தில் واذا بشر احدهم بالانثي என்ற வசத்தின் மூலம் பெண் பிறப்பை பஷாரத் என்று கூறி பெண் சமூகத்திற்கு பெருமை சேர்த்த மார்க்கம் இஸ்லாம்.

சில பேருக்கு ஆண் பிள்ளையைக் கொடுப்போம் சில பேருக்கு பெண் பிள்ளையைக் கொடுப்போம்,சில பேருக்கு இரண்டையும் ஜோடியாக கொடுப்போம், சில பேருக்கு குழந்தைகள் இல்லாத சூழ்நிலையையும் உருவாக்குவோம் என்று குழந்தைப் பேற்றைக் குறித்து பேசப்படுகின்ற திருமறை வசனத்தில் ஆண் குழந்தையை விட பெண் குழந்தையை முற்படுத்தி பெண் சமூகத்திற்கு கண்ணியம் சேர்த்த மார்க்கம் இஸ்லாம்.

பெண் என்பவள் பழிப்பிற்குரியவர் சாபத்திற்குரியவள் கைசேதத்திற்குரியவள் என்று பெண் இனத்தையே ஒரு மாதிரியாக பார்க்கப்பட்ட காலகட்டத்தில் البنت بركة பெண் பிள்ளை பரக்கத்தானது.பெண் பிள்ளை பல்வேறு வகையான அபவிரித்திகளும் நலவுகளும் வாழ்வின் வசந்தங்களும் கிடைக்க காரணமாக விளங்கக்கூடியவள் என்று கூறி பெண் சமூகத்தை உயர்ந்த சமூகமாக அடையாளப்படுத்தியவர்கள் அருமை நாயகம் ஸல் அவர்கள்.

يا أيها الناس، إني تركت فيكم ما إن أخذتم به لن تضلوا: كتاب الله، وعترتي أهل بيتي

மக்களே நான் உங்களிடம் இரு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் எடுத்துக் கொண்டால் வழிதவற மாட்டீர்கள். ஒன்று இறைவேதம், இன்னொன்று என்று குடும்பம். (ஷரஹுஸ்ஸுன்னா ; 3914)

அஹ்ல பைத் என்று சொல்லப்படுகிற அண்ணல் நபி ஸல் அவர்களின் வம்சம் அவர்களின் குடும்பம் பரிசுத்தமானது அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்டது.நபி ஸல் அவர்கள் எந்த வம்சத்தில் பிறந்தார்களோ அந்த வம்சமும் நபிக்கு பிறகு கியாமத் வரை நபியின் வம்சத்தில் யாரெல்லாம் இடம் பெறுகிறார்களோ அவர்கள் அத்தனை பேரும் பரிசுத்தமானவர்கள் என்பதும் தூய்மையானவர்கள் என்பதும் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்று.

இந்தளவு பரிசுத்தமான தூய்மையான நாம் அனைவரும் பற்றிப்பிடிக்க வேண்டிய அண்ணல் நபி ஸல் அவர்களின் வம்சம் இன்று மட்டுமல்ல இனி கியாமத் வரை தொடர்ந்து இருப்பதற்கும் நிலைப்பதற்கும் அல்லாஹ் தேர்ந்தெடுத்தது நபியின் பெண் பிள்ளையான அருமை மகள் ஃபாத்திமா ரலி அவர்களைத்தான்.அன்னை ஃபாத்திமா ரலி அவர்களிலிருந்து தான் நபியின் வம்சம் தொடங்கி இன்று வரை நிலைத்து நிற்கிறது.

இப்படி பெண்களுக்கு பெண் சமூகத்திற்கு இஸ்லாம் கொடுத்த கண்ணியத்தையும் மரியாதையையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒரு நாள் உமர் ரலி அவர்கள் மிம்பரில் ஏறி நின்று ஏன் நீங்கள் பெண்களுக்கான மஹரை அதிகப்படுத்துகிறீர்கள். நபி ஸல் அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்களிடத்தில் மஹர் என்பது 400 திர்ஹமை விட அதிகமாக இருந்ததில்லை. அதை விட அதிகப்படுத்துவது இறையச்சத்திற்குரிய காரியமாக இருக்குமானால் அந்த இறையச்சத்தில் அவர்களை விட நீங்கள் முந்தியவர்கள் இல்லை. எனவே யாரும் 400 திர்ஹமை விட மஹரை அதிகமாக கொடுக்க வேண்டாம் என்று கூறி மிம்பரை விட்டும் இரங்கி விட்டார்கள்.

 அதை அறிந்த ஒரு பெண்மனி உமர் ரலி அவர்களை குறிக்கிட்டு அல்லாஹ் குர்ஆனில் நிஸா என்ற அத்தியாத்தின் 20 வது வசனத்தில் மஹரைக் குறித்து பொற்குவியல் என்று கூறுகிறான். எனவே மஹரை அதிகமாக தர வேண்டாம் என்று நீங்கள் எவ்வாறு கூறலாம் என்று கேட்டாள். உடனே உமர் ரலி அவர்கள் இறைவன் என்னை மன்னிப்பானாக அனைவரும் இந்த உமரை விட அதிகம் மார்க்கம் தெரிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று கூறி மீண்டும் மிம்பரில் ஏறி நான் அதிகப்படுத்த வேண்டாம் என்று கூறினேன். ஆனால் இப்போது கூறுகிறேன் ; உங்களில் ஒருவர் எவ்வளவு விரும்புகிறாரோ அதை கொடுக்கட்டும் என்று கூறினார்கள். சில அறிவிப்புகளில் உமர் தவறிழைத்து விட்டார். அந்த பெண் சரியாக சொன்னாள் என்று கூறியதாக வருகிறது. (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

பெண்களுக்கான மஹரை இஸ்லாம் சரியான முறையில் கொடுக்கச் சொல்கிறது. அதனை மாற்றி அமைக்கின்ற உரிமையோ, அதிகாரமோ ஒரு ஜனாதிபதிக்குக் கூட கிடையாது என்று இச்சம்பவத்தின் மூலம் உணருகின்ற அதே வேளேயில் ஒரு ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக தன் கருத்தை பதிவு செய்கின்ற உரிமையை ஒரு சாதாரன பெண்ணுக்கும் இஸ்லாம் வழங்குகிறது என்பதை நாம் விளங்க முடிகிறது.

 ஹதீஸ்களில் அப்பெண்மனி யார் அவளின் பெயர் என்ன என்றெல்லாம் குறிப்பிடப்பட வில்லை. அப்படியென்றால் முன்பின் அறிமுகமில்லாத அடிதட்டு குடிமக்களில் கட்டுப்பட்ட ஒரு பெண்ணாகத்தான் அவர்கள் இருக்க வேண்டும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. 

ஆக சாதாரண ஒரு பெண்மனி தனக்கு எதிராக பேசிவிட்டார்கள் என்று யோசிக்காமல் வேகப்படாமல் அப்பெண்மனி சரியானதை சொல்லி விட்டாள்.நான் தான் தவறாக சொல்லி விட்டேன் என்று உமர் ரலி அவர்கள் சொன்னார்கள் என்றால் இஸ்லாம் எந்தளவு பெண்களுக்கு சமூக அங்கீகாரத்தை சமூக அந்தஸ்தை தன் கருத்துக்களை கூறும் சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

சமூகத்தில் மட்டுமல்ல படைத்தோனாம் அல்லாஹ்விடத்திலும் அங்கீகாரத்தைப் பெற்றவர்கள் பெண்கள். ஜனாதிபதியிடத்தில் தைரியமாக பேசி தன் உரிமைகளைப் பெற்றுக் கொள்பவர்கள் மட்டுமல்ல அந்த ஜனாதிபதியைப் படைத்த அல்லாஹ்விடத்திலும் தன் உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் ஆற்றலும் அதற்கான தகுதியும் பெற்றவர்கள் பெண்கள் என்பது வரலாறு கூறும் உண்மை.


ஒரு முறை ஹள்ரத் உமர் ரலி அவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் தன் சீடர்களோடு நகர் வளம் வந்து கொண்டிருந்தார்கள்.இடையில் ஒரு மூதாட்டி குறிக்கிட்டு உமர் ரலி அவர்களுக்கு வெகு நேரம் உபதேசம் செய்து கொண்டிருந்தார்கள்.உமர் ரலி அவர்களும் அதை பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.அதனைக் கண்ணுற்ற சீடர்கள், இந்த மூதாட்டியின் பேச்சைக் கேட்டு ஒரு ஜனாதிபதியான நீங்கள் இவ்வளவு நேரம் நிற்க வேண்டுமா என்று கேட்டார்கள்.அப்போது உமர் ரலி அவர்கள் இடையில் தொழுகை நேரம் மட்டும் இல்லையெனில் அந்த மூதாட்டியின் பேச்சைக் கேட்க நான் இரவு வரை கூட நின்றிருப்பேன்.அவர்கள் யார் தெரியுமா ? அவர் தான் கவ்லா பின்த் ஸஃலபா படைத்த அல்லாஹ்வே அவர்களின் சொல்லைக் கேட்டான்.இந்த உமர் கேட்க மாட்டாரா என்று கூறினார்கள். (தஃப்ஸீர் குர்துபீ)

 கவ்லா ரலி என்ற பெண்மனிக்கும் அவரது கணவர் அவஸ்  ரலி அவர்களுக்கும் ஒரு சமயம் சின்ன சண்டை ஏற்பட்டு கோபத்தில் அவர் தன் மனைவியைப் பார்த்து நீ என் மீது என் தாயின் முதுகைப் போல என்று கூறி விட்டார்.{பொதுவாக ஒருவர் தன் மனைவியை தனக்கு மஹ்ரமான ஒரு பெண்ணோடு இவ்வாறு ஒப்பிட்டு கூறி விட்டால் அதற்கு மார்க்கத்தில் ளிஹார் என்று சொல்லப்படும். அந்த நேரத்தில் அந்த இருவருக்கும் மத்தியில் பிரிவினை ஏற்பட்டு விடும். இருவரும் அதன் பிறகு சேர்ந்து வாழ முடியாது} சிறிது நாட்கள் கழித்து தான் சொன்னது தவறு என்றுணர்ந்து மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பி மனைவியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அதற்கு கவ்லா ரலி அவர்கள், நான் நபியிடம் சென்று இதற்கான விளக்கத்தை தெரிந்து வருகிறேன் என்று கூறி நபியிடம் வந்து கேட்ட போது நபி ஸல் அவர்கள், உங்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டு விட்டது.எனவே நீங்கள் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி விட்டார்கள்.

அதற்கு அந்த பெண்மனி, யாரசூலல்லாஹ் என் கணவர் கோபத்தில் சொன்ன வார்த்தை.அதனைக் கொண்டு அவர் தலாக்கை நாட வில்லை என்று கூறிய போது நபி ஸல் அவர்கள், எப்படியிருந்தாலும் நீங்கள் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி விட்டார்கள்.அந்த பெண்மனி போய் விடுகிறார்கள்.

மறுபடியும் இரண்டாவது முறை வந்து சேர்ந்து வாழ்வதற்கான கோரிக்கையை வைத்தார்.என் கணவர் தலாக் விட வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்ல வில்லை. ஏதோ கோபத்தில் சொல்லி விட்டார் என்று சொல்லிப் பார்த்தார். அப்போதும் நபி ஸல் அவர்கள் முந்தைய பதிலையே சொன்னார்கள். இதற்கிடையில் அந்த பெண்மனி அல்லாஹ்விடமும் தன் பிரச்சனைக்கான தீர்வை நாடி துஆ செய்து கொண்டிருந்தார்.

கொஞ்ச நாள் பிறகு மறுபடியும் அந்த பெண்மனி வந்து யாரசூலல்லாஹ் நான் வயதான பெண்மனி.எனக்கு ஆதரவாக என் குடும்பத்தில் யாருமில்லை. என் கணவரும் வயதானவர் அவருக்கும் என்னை விட்டால் ஆதரவில்லை. எனக்கு சின்ன பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களையும் கவனிக்க வேண்டும்.அந்த பிள்ளைகளை என் கணவரோடு விட்டால் அவர்கள் வீணாகி விடுவார்கள். என்னோடு வைத்துக் கொண்டால் பசியால் வாடிப் போவார்கள்.எனவே இக்கட்டான சூழ்நிலையிலே நான் இருக்கிறேன் என்று அந்த பெண்மனி கூறினார்கள்.அப்போதும் நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து இதற்கான எந்த பதிலும் வர வில்லை. அதனால் நீங்கள் சேர்ந்து வாழ வழியில்லை என்று கூறினார்கள்.

இப்படி மூன்று முறை கேட்டும் தன் இயலாமையை வெளிப்படுத்தியும் எந்த பலனும் ஏற்பட வில்லை.இருந்தாலும் அவர்கள் மனம் தளர வில்லை. அல்லாஹ்விடம் தன் கோரிக்கைத் தொடர்ந்தார்கள். என் பிரச்சனைக்கான ஒரு தீர்வை உன் நபியின் நாவின் வழியாக எனக்கு ஏற்படுத்து என்று அல்லாஹ்விடம் கேட்டு அழுதார்கள்.கெஞ்சி கண்ணீர் வடித்தார்கள். அவர்களின் அந்த குரல் அல்லாஹ்வின் அர்ஷின் கதவைத் தட்டியது. அல்லாஹ் ஒரு அடிமையை உரிமை விடுதல், 60 நாட்கள் நோன்பு நோற்றல்,60 ஏழைகளுக்கு உணவளித்தல் இந்த கஃப்பாராக்களில் ஒன்றை செய்து இருவரும் சேர்ந்து கொள்ளலாம் என்ற வசனங்களை இறக்கி வைத்தான். (தஃப்ஸீர் குர்துபீ)

அல்லாஹ் நமக்கு இறக்கி அருளிய இறைச்சட்டம் என்பது மிகவும் உறுதியானது, நிலையானது. உலகத்தின் சூழ்நிலைக்காக மக்களின் வசதிக்காக ஆட்சியாளர்களின் விருப்பத்திற்காக அவ்வப்போது மாற்றப்படும் இந்த உலக சட்டங்களைப் போன்று பலகீனமாதல்ல. ஆனால் அந்த வல்ல அல்லாஹ்வின் சட்டத்தையே தன் பிரார்த்தனையின் மூலம் ஒரு பெண்மனி மாற்றிக் காட்டினார்கள் என்றால் இஸ்லாம் பெண்களுக்கு எந்தளவு உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளது தன் தேவைகளை தன் விருப்பங்களை கேட்டுப் பெறும் உரிமைகளை வழங்கியிருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இப்படி இஸ்லாம் பெண்களுக்கு பிறப்புரிமை வாழ்வுரிமை சொத்துரிமை, பேச்சுரிமை, கல்வியில் உரிமை, திருமண உரிமை தேவைப்பட்டால் பிரிந்து கொள்ளும் உரிமை என்று அத்தனையையும் வழங்கி பெண்களுக்கு சமூகத்தில் சிறந்த இடத்தை கொடுத்திருக்கிறது.


அல்லாஹ் நமது பெண்மக்களை கல்வியில் ஆயிஷா (ரலி) யைப்போன்றும் ஒழுக்கத்தில் பாத்திமா(ரலி) யைப்போன்றும். திருமணத்தை தேர்வு செய்வதில் உம்மு சுலைம்(ரலி) அவர்களைப்போன்றும். இஸ்லாமிய பற்றில் அன்னை கதிஜா (ரலி) அவர்களைப்போன்றும் . இன்னும் எல்லா நிலைகளிலும் நபி தோழியர்களை பின் பற்றி வாழச்செய்வானாக ஆமீன்…
             

Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025