பாவங்கள் சாதாரணமானதல்ல...... 14-03-25 27-02-2026


பாவங்கள் சாதாரணமானதல்ல...

அல்லாஹ்வின் மகத்தான கருணையும், அருளும், மன்னிப்பும் பிரவாகமெடுத்துப் பாய்ந்தோடும் அருள் நிறைந்த ரமழான் மாதத்தின் இரண்டாவது பத்தின் முதல் ஜும்ஆவில் நாம் வீற்றிருக்கின்றோம்.

ரமழானின் முதல் பத்து நாட்களில் அல்லாஹ்விடம் அவனது அருளையும், இரண்டாம் பத்தில் அல்லாஹ்விடம் அவனது மேலான மன்னிப்பையும், மூன்றாம் பத்தில் கொடிய நரகிலிருந்து அவனிடம் விடுதலையையும் கேட்டுப் பிரார்த்திக்குமாறு மாநபி {ஸல்} அவர்கள் நமக்கு வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எல்லையில்லா அவனது அருளையும், மன்னிப்பையும் உங்களுக்கும், எனக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், என் குடும்பத்தாருக்கும் ஈருலகத்திலும் நிரப்பமாக வழங்கியருள்வானாக!


 உலகப்படைப்புக்களில் மனிதன் பலவீனமானவன். மறதியாளன். அறியாமையில் இருப்பவன். அவன் தன் பலவீனத்தாலும் அறியாமையாலும் அல்லாஹ்வை மறந்ததினாலும் பாவம் செய்து விடுகிறான்.

பாவம் செய்வது, இறைவனுக்கு மாறு செய்வது மனித இயல்பு. உலகத்தில் நபிமார்களைத் தவிர அனைவரும் பாவம் செய்பவர்கள் தான். அல்லது செய்தவர்கள் தான். ஆனால் அவ்வாறு பாவம் செய்பவர்களில் சிறந்தவர்களும் புத்திசாலிகளும் யாரென்றால் தன் பாவங்களை நினைத்து வருந்தி திருந்தி பாவமன்னிப்பின் மூலம் அல்லாஹ்விடம் மீளுபவர்கள் தான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا

ஈமான் கொண்டோர்களே! கலப்பற்ற இதயத்துடன் தவ்பா செய்வதின் மூலம் இறைவன் பக்கம் மீளுங்கள். (அல்குர்ஆன் : 66 ; 8)

தவ்பா செய்து அதன் மூலம் இறைவனின் பக்கம் மீளுவது குறித்து சிந்தப்பதற்கு முன்பு பாவங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

قال عبد الله بن عباس رضي الله عنهما: (إنَّ للحسنة ضِيَاءً في الوجهِ ونوراً في القَلب، وَسَعَةً في الرّزقِ وقوةً في البدنِ، ومَحبَّةً في قُلُوبِ الخلقِ... وإنَّ للسيئةِ لَظُلْمةً في القلبِ واسْوِدَاداً في الوجهِ، ووَهَناً في البدنِ ونَقْصاً في الرزقِ، وبُغْضاً في قلوبِ الخَلْقِ

நன்மையான காரியத்தால் முகத்தில் ஒளியும் உள்ளத்தில் பிரகாசமும் ரிஜ்கில் விஸ்தீரணமும் உடலில் ஆற்றலும் மனித உள்ளங்களில் பிரியம் ஏற்படும். தீமையான காரியத்தால் உள்ளத்தில் இருளும் முகத்தில் கருமையும் உடலில் பலவீனமும் ரிஜ்கில் குறைபாடும் மனித உள்ளங்களில் வெறுப்பும் ஏற்படும் என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

நாம் செய்யக்கூடிய பாவங்கள் சாதாரணமானவையல்ல. நம்மிடம் ஏற்படும் ஒவ்வொரு பாவமும் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் ஏராளமான இழப்புக்களை ஏற்படுத்துகிறது. பாவங்கள் மார்க்க ஞானங்களை நமக்கு கிடைக்க விடாமல் தடுத்து விடும். பாவங்கள் நம் ரிஜ்கில் நெருக்கடியை ஏற்படுத்தும். பாவங்கள் உள்ளத்தில் இருளையும் ஒரு வகையான வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும். பாவங்கள் நம் காரியங்கள் அனைத்தையும் சிரமமாக்கி விடும். பாவங்கள் உலகிலும் மறுமையிலும் இழிவை ஏற்படுத்தும். பாவங்கள் நம் வாழ்வில் அதிகமான சோதனைகளையும் முஸீபத்துகளை யும் கொண்டு வரும். பாவங்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கு வழங்கப்பட்ட நிஃமத்துக்களை இல்லாமல் ஆக்கி விடும். பாவங்கள் கெட்ட முடிவுக்குக் காரணமாக இருக்கும். பாவங்கள் இறைவனின் கோபத்திற்கும் அதன் மூலம் அவனுடைய தண்டனைக்கும் வழிவகுக்கும். 

ஒரு சின்ன தவறு தான் நம் தாய் தந்தையான ஆதம் ஹவ்வா அலை அவர்களை சுவனத்திலிருந்து வெளியாக்கியது. ஒரு சின்ன பாவம் தான் நாளை மறுமையில் ஒரு மனிதனை சுவனத்தில் நுழைய விடாமல் தடுக்கும். 

فإنَّ أحَدَكم لَيَعمَلُ بعمَلِ أهلِ الجَنَّةِ حتَّى ما يكونُ بينه وبينها إلَّا ذِرَاعٌ، أو قِيدُ ذِرَاعٍ، فيسبِقُ عليه الكتابُ فيَعمَلُ بعمَلِ أهلِ النَّارِ فيدخُلُها ابو داود ٤٧٠٨

உங்களில் ஒருவர் சுவனத்தின் பக்கம் ஒரு முழம் வரை நெருங்கும் அளவிற்கு சுவனவாதிகளின் அமல்களை செய்பவராக இருப்பார். ஆனால் அவரிடத்தில் இறைவனுடைய விதி முந்தி விடும். அவர் நரகவாசிகளின் ஒரு செயலை செய்து நரகத்திலும் நுழைந்து விடுவார். (அபூதாவூது ; 4708)



قال ابن الجوزى -رحمه الله- (يا طالب الجنة ، بذنب واحد أخرج أبوك منها ، أتطمع في دخولها بذنوب لم تتب عنها

சுவனத்தை தேடுபவனே! ஒரே ஒரு குற்றத்தினால் தான் உனது தந்தை சுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் நீ பாவங்களை செய்து கொண்டு சுவனத்தில் நுழைந்து விடலாம் என்று கனவு கானுகிறாயா? என்று அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ ரஹ் அவர்கள் கேட்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக பாவங்கள் இறை நெருக்கத்தை தடுத்து விடும்.

وقال الحسن البصري : يابن آدم .. خالف موسى الخضر ثلاث مرات ، فقال له : هذا فراق بيني وبينك وأنت تخالف الله في اليوم مرات ، ألا تخشى أن يقول لك هذا فراق بيني وبينك ؟؟

மூஸா நபி அவர்கள் மூன்று முறை ஹிள்ர் அலை அவர்களுக்கு மாறு செய்த போது, இது எனக்கும் உங்களுக்குமான பிரிவின் நேரம். இனிமேல் என்னுடன் நீங்கள் வர முடியாது என்று சொன்னார்கள். மனிதா! நீ ஒரு நாளைக்கு எத்தனை தடவை இறைவனுக்கு மாறு செய்கிறாய். உன் இறைவன் உன்னைப் பார்த்து இது எனக்கும் உனக்குமான பிரிவின் நேரம். இனிமேல் என்னை சேர முடியாது. என்னை நெருங்க முடியாது என்று சொல்லி விடுவான் என்று நீ அஞ்ச வேண்டாமா? என ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் கேட்கிறார்கள்.

قال يحيى بن معاذ رحمه الله تعالى: (اجْتِنَابُ السَّيِّئَاتِ أَشَدُّ مِنْ كَسْبِ الحَسَنَاتِ

நன்மைகளை சம்பாதிப்பதை விட தீமைகளை விட்டும் விலகிக் கொள்வது தான் மிகவும் முக்கியமானது என யஹ்யா பின் முஆத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே நாம் செய்யக்கூடிய பாவங்களின் காரணமாக நமக்கு ஏற்படுத்துகின்ற இழப்புக்களும் நஷ்டங்களும் ஏராளம். அதனால் நாம் பாவங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படியே பாவங்களை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்பவர் அவர் உண்மையான முஃமினாக இருக்க முடியாது.

قال ابن مسعود : "إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه، وإن الفاجر يرى ذنوبه كذباب مر على أنفه فطار".

 மலையடிவாரத்தில் அமர்ந்திருப்பவர், அந்த மலை தன் மீது விழுந்து விடுவதை பயப்படுவதைப் போன்று ஒரு மூஃமின் தன்னிடம் ஏற்படக்கூடிய பாவங்களைக் கருதுவார். ஆனால் ஒரு பாவி தன் மூக்கின் மீது ஒரு ஈ அமர்ந்து விட்டு செல்வதைப் போன்று தன் பாவங்களைக் கருதுவான் என இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

மலை அடிவாரத்தில் அமர்ந்து இருப்பவனுக்கு மலை விழுந்து விடுமோ என்ற அச்சம் எவ்வளவு பெரிய கலக்கத்தையும் பீதியையும் பதட்டத்தையும் ஏற்படுத்துவோ அதைப்போன்ற கலக்கமும் பீதியும் பதட்டமும் பாவம் செய்கின்ற பொழுது ஏற்பட வேண்டும். இந்த மாதிரியான அச்சம் ஸஹாபாக்களுக்கு இருந்தது.


ஸஃலபா என்ற அன்ஸாரி ஸஹாபி ஒருவர்.நபி ஸல் அவர்களின் செய்தி தொடர்பாளர்.அவர்களை நபி ஸல் அவர்கள் ஒரு தேவைக்காக அனுப்பி வைக்கிறார்கள்.ஒரு அன்ஸாரிப் பெண் குளிக்கும் காட்சி எதார்த்தமாக இவர்களின் கண்ணில் பட்டு விட்டது.மீண்டும் தங்களின் பார்வையை அப்பக்கமாக திருப்பி பார்த்து விடுகிறார்.அவ்வளவு தான் அச்சம் பிடித்துக்கொ ள்கிறது. அல்லாஹ் என் மீது கோபம் கொண்டு வஹி ஏதும் இறக்கிவிடுவானோ என்ற பயத்தில் மலையை நோக்கி ஓடுகிறார். நாற்பது தினங்களுக்கு பின்னால் ஒரு நாள் ஜிப்ரயீல அலை அவர்கள் நபி ஸல் அவர்களை சந்தித்து அல்லாஹ்வின் ஸலாமை எடுத்துச்சொல்லி விட்டு உங்களில் ஒருவர் தவ்பாவைத் தேடி நரகை விட்டும் பாதுகாவல் தேடி மலை உச்சியிலிர்ந்து கதறுகிறார் என்ற செய்தியை அல்லாஹ் உங்களுக்கு எத்தி வைக்கச்சொன்னான் என்றார்கள்.உடனே நபி ஸல் அவர்கள் தம் தோழர்களில் உமர் ரலி,ஸல்மான் ரலி ஆகிய இருவரையும் அனுப்பி வைத்து ஸஃலபாவை கண்டு பிடித்து தன்னிடம் அழைத்து வரச்சொன்னார்கள்.அவ்விருவரும் மதீனாவின் தெருக்களில் எல்லாம் தேடி அலைந்து இறுதியில் மலையடிவாரத்தில் ஆடு மேய்க்கும் இடையனிடம் விசாரித்தார்கள்.

அந்த இடையன்,நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிற அந்த இளைஞரையா நீங்கள் தேடுகிறீர்கள்?என்றதும்-அவர் நரகை விட்டும் பாதுகாப்பு தேடுகிறவர் என்று நீர் எப்படி தெரிந்து கொண்டீர் என அந்த இரு ஸஹாபாக்களும் கேட்டபோது, நடுஇரவில் மலையிலிருந்து இறங்கி வந்து அழுதவராக துஆச் செய்ய பார்த்திருக்கிறேன் என்று பதில் கூறினார். ஒருவழியாக உமர் ரலி அவர்கள் இரவு நேரத்தில் மறைந்திருந்து அவருக்காக காத்திருக்கிறார்கள்.அவர் மலையிலிருந்து கீழே இறங்கியதும் அவரைப் பிடித்து விடுகிறார்கள்.

அப்போது அவர்,நரகிலிருந்து நான் தப்பிக்க முடியுமா?என்று கேட்கிறார்கள். அதற்கு உமர் ரலி ஆம் நீ நரகிலிருந்து பாதுகாக்கப்படுவாய் என்றார்கள்.

உமரே!நான் செய்த பாவத்தை பற்றி நபிக்கு தெரிந்து விட்டதா? என்று கேட்டார்கள்.அதைபற்றி எனக்கு தெரியாது,உங்களை தேடி கண்டு பிடித்து கொண்டுவரச் சொல்லி பெருமானார்உத்தரவிட்டார்கள் என்று உமர் ரலி அவர்கள் கூறியதும், நாயத்தைப் பார்க்க எனக்கு வெட்கமாக இருக்கிறது,எனவே நபி ஸல் தொழுது கொண்டிருக்கும் போது என்னை அங்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்கள்.

நபி ஸல் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது பின்னால் சேர்ந்துகொண்ட அவர்கள் தொழுகையின் இடையில் மயக்கமுற்று விழுந்து விட்டார்கள். தொழுகையை நிறைவு செய்த நபி ஸல் அவர்கள் அவரின் தலையை தூக்கி தன் தொடையில் வைத்தபோது, மயக்கம் தெளிந்த அந்த ஸஹாபி, தன் தலையை கீழே வைக்கிறார்கள்.அல்லாஹ்வின் தூதரே உங்களின் முபாரக்கான மடியில் தலைவைக்கும் தகுதி எனக்கு இல்லை நான் பெரும்பாவி என்றார்கள். உனக்கு என்ன வேண்டும் நபியவர்கள் கேட்க, அவர் மன்னிப்பு வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது அவரின் மன்னிப்பு குறித்து ஜிப்ரயீல் மூலம் அல்லாஹ் செய்தி சொல்லி அனுப்பினான். அதைக்கேட்டதும் சப்தமிட்டார்கள். அவர்களின் ரூஹ் பிரிந்து விடுகிறது.

அவரை குளிப்பாட்டி,கபன் செய்து தொழவைத்து அடக்கம் செய்து முடித்த நபி ஸல் அவர்கள், இந்த ஸஹாபியின் ஜனாஸாவில் ஏராளமான மலக்குகள் கலந்து கொண்டார்கள் என்று கூறினார்கள்..(மஃரிஃபதுஸ் ஸஹாபா 1/498)

இது தான் நபி ஸல் அவர்கள் உருவாக்கிய அவர்கள் வளர்த்து ஆளாக்கிய பரிசுத்தமான வாலிப சமூகம். எதார்த்தமாக ஹராமான ஒரு பார்வை பார்த்த காரணத்தினால் அல்லாஹ்வின் அச்சத்தில் தன் உயிரையே மாய்த்துக் கொண்டார்கள் என்றால் பாவத்தை நினைத்து அவர்கள் எந்தளவு பயந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

அந்த அச்சம் நம்மிடம் வர வேண்டும். இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமக்கு ஏற்பட வேண்டும். அந்த எண்ணமும் சிந்தனையும் இருந்தால் நம்மிடம் பாவங்கள் ஏற்படாது. அப்படி ஒருவேளை நம் பலவீனத்தால் பாவம் ஏற்பட்டு விட்டால் தாமதிக்காமல் உடனே தவ்பா செய்து கொள்ள வேண்டும்.

பாவங்களின் வாசல்களை திறந்து வைத்த இறைவன் தான் பாவமன்னிப்பின் வாசல்களையும் திறந்து வைத்திருக்கிறான்.



قال إبْليسُ: أيْ ربِّ، لا أزالُ أُغوي بَني آدَمَ، ما دامت أرْواحُهم في أجْسادِهم، قال: فقال الرَّبُّ عزَّ وجلَّ: لا أزالُ أغفِرُ لهم ما استَغفَروني احمد ١١٧٢٩

இறைவா! மனிதர்களின் உயிர்கள் அவர்களின் உடல்களில் இருக்கும் காலமெல்லாம் அவர்களை நான் வழிகெடுத்து கொண்டே இருப்பேன் என்று இப்லீஸ் சொன்ன பொழுது அவர்கள் என்னிடத்தில் பாவ மன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவர்களை நான் மன்னித்துக் கொண்டே இருப்பேன் என்று இறைவன் சொன்னான். (அஹ்மது ; 11729)

قال العلماء: أربعة أشياء من العبد وأربعة من الرب: الشكر من العبد، والزيادة من الرب، والطاعة من العبد، والقبول من الرب، والدعاء من العبد، والإجابة من الرب، والاستغفار من العبد، والغفران من الرب"(تهذيب خالصة الحقائق، محمود بن أحمد الفاريابي)

நான்கு விஷயங்கள் மனிதனைச் சார்ந்தது. நான்கு விஷயங்கள் இறைவனைச் சார்ந்தது. மனிதனிடத்தில் அந்த நான்கு விஷயங்கள் வருகின்ற பொழுது இறைவனும் அந்த நான்கு விஷயங்களை செய்கிறான். ஒரு நிஃமத்திற்கு ஷுக்ர் செய்வது மனிதனைச் சார்ந்தது. அந்த நிஃமத்தை அதிகப்படுத்துவது இறைவனைச் சார்ந்தது. வழிபடுதல் மனிதனைச் சார்ந்தது. அதை ஏற்றுக்கொள்வது இறைவனைச் சார்ந்தது. பிரார்த்திப்பது மனிதனைச் சார்ந்தது. அதற்கு பதிலளிப்பது இறைவனைச் சார்ந்தது. பாவமன்னிப்புத் தேடுவது மனிதனைச் சார்ந்தது. அந்த பாவத்தை மன்னிப்பது இறைவனைச் சார்ந்தது என்று மார்க்க அறிஞர்கள் கூறுவார்கள்.

எனவே மன்னிப்பைக் கொடுப்பதற்கு இறைவன் தயாராக இருக்கிறான். மன்னிப்பைப் பெறுவதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பது நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய செய்தி.


இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்களிடத்தில் ஒருவர் வந்து நான் அதிகம் பாவம் செய்து கொண்டிருக்கிறேன். அந்த பாவத்தை நான் விடுவதற்கு எனக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள். அந்த பாவத்தை விட்டும் நான் விலகிக் கொள்ளும்படியான ஏதாவது எச்சரிக்கையை எனக்கு ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் ஐந்து விஷயத்தின் மீது நீ சக்தி பெற்றால் நீ செய்யக் கூடிய எந்த பாவமும் உனக்கு எந்த இடையூறையும் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறினார்கள். அது என்ன ஐந்து விஷயம் என்று அவர் கேட்டார். 

1 வது, நீ பாவம் செய்வதாக இருந்தால் இறைவனுடைய உணவை நீ உண்ணக் கூடாது என்றார்கள். அப்போது அவர் அது எப்படி சாத்தியமாகும்? பூமியிலே இருக்கிற அத்தனையும் இறைவன் கொடுத்த உணவு அல்லவா! என்று கேட்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அப்படி என்றால் இறைவனுக்கு மாறு செய்து கொண்டு இறைவன் தரக்கூடிய உணவை உண்ணலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

இரண்டாவது நீ பாவம் செய்வதாக இருந்தால் இறைவனுடைய பூமியிலே நீ தங்கக்கூடாது என்றார்கள். அது எப்படி சாத்தியமாகும்? உலகத்தில் இருக்கும் அனைத்தும் இறைவனுடைய பூமி அல்லவா! என்று அவர் கேட்ட பொழுது, இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அப்படி என்றால் இறைவனுடைய உணவை உண்டு கொண்டு இறைவனுடைய பூமியில் நீ தங்கிக் கொண்டு அவனுக்கு மாறு செய்யலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

மூன்றாவது ; நீ பாவம் செய்வதாக இருந்தால் இறைவன் பார்க்காத இடத்திலிருந்து நீ பாவம் செய் என்றார்கள். அதற்கு அவர் அது எப்படி சாத்தியமாகும்? இறைவன் எல்லாவற்றையும் அறிந்தவன் அல்லவா! அவனுக்கு உள்ளும் புறமும் தெரியும். எல்லாம் அறிந்தவன். அவனுடைய பார்வையை விட்டும் நான் எப்படி தப்பிக்க முடியும்? என்று கேட்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அப்படி என்றால் இறைவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் நீ பாவம் செய்யலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

நான்காவது ; நீ பாவம் செய்து கொண்டிருக்கின்ற நிலையில் உன் உயிரை கைப்பற்றுவதற்கு மலக்கு உன்னிடத்திலே வந்தால் நான் தவ்பா செய்ய வேண்டும். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கேள் என்றார்கள். அப்போது அவர் உயிரை கைப்பற்றுவதற்கு மலக்கு வந்து விட்டால் எப்படி அவகாசம் கிடைக்கும்? தவ்பா செய்வதற்கு எப்படி சந்தர்ப்பம் கிடைக்கும்? என்று அவர் கேட்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் உயிரை கைப்பற்றுவதற்கு மலக்கு வந்து விட்டால் அதை தாமதப்படுத்த முடியாது. தவாஃப் செய்வதற்கு அவகாசம் கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நீ எப்படி பாவம் செய்யலாமா? என்று கேட்டார்கள் இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

ஐந்தாவது ; நீ பாவம் செய்து அதே நிலையில் மவ்த்தாகி அல்லாஹ் உனக்கு நரகத்தைக் கொண்டு தீர்ப்பளித்து விட்டால் நரகத்திற்கு உன்னை இழுத்துச் செல்லக்கூடிய மலக்குகள் உன்னிடத்தில் வரும்பொழுது நீ அவர்களோடு செல்லாதே என்றார்கள். அது எப்படி சாத்தியமாகும்? அவர்கள் ரொம்பவும் சக்தி பெற்றவர்கள். வலு உள்ளவர்கள். அவர்களோடு நான் எப்படி செல்லாமல் இருக்க முடியும்? என்னை எப்படி அவர்கள் விடுவார்கள்? நான் ஏதாவது சொன்னால் என்னிடத்திலிருந்து எப்படி அதை ஏற்றுக் கொள்வார்கள்? என்றெல்லாம் அவர் கேட்டார். இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அவர்களை விட்டும் தப்பிக்க முடியாது என்று தெரிந்திருந்தும் நீ பாவம் செய்யலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக் கொண்டார்.

இந்த ஐந்து விஷயங்களையும் கேட்ட பிறகு அவர் மனம் திருந்தி வருந்தி இறைவனிடத்தில் தவ்பா செய்து மீண்டு தூய்மையான வாழ்க்கைக்குத் தயாராகி கொண்டார்.



இது புனிதமான ரமலான் மாதம். பதினோறு மாதங்கள் நாம் செய்த பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுகின்ற மாதம். 

عن أبي هريرة رضي
“ஒரு முறை நபி ஸல் அவர்கள் மிம்பர் மீது ஏறும் போது மூன்று முற ை “ஆமீன்” கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரின் மீது ஏறும் போது “ஆமீன்” என மூன்று முறை கூறினீர்களே” என வினவப்பட்டது.

என்னிடம் வானவர் ஜிப்ரயீல் (அலை) வருகை தந்து “யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வில்லையோ அவர் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டும் அவர் தூரமாகி விடட்டும்” எனக ் கூறிவிட்டு, ”ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் முதல ் முறை “ஆமீன்” கூறினேன்.


என்ற இந்த ஹதீஸை நாம் எல்லாருமே அறிந்திருக்கிறோம். ஆனால் அதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் இந்த துஆவின் ஆழத்தையும் அதன் வீரியத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த துஆவிற்கு ஆமீன் சொன்னது நபிகள் பெருமானார் ஸல் அவர்கள். உலகத்தில் எத்தனையோ முஸ்தஜாபுத் துஆ - இறைவனிடத்தில் கையேந்தி விட்டால் அவர்கள் கேட்கின்ற எந்த துஆவும் மறுக்கப்படாத அந்தஸ்தை பெற்றவர்கள் நிறைய உண்டு. ஆனால் அந்த விஷயத்தில் இறைவனிடத்தில் மிக மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் இறைவனிடத்தில் தன் கோரிக்கையை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் ஒரு விஷயத்தை விரும்பினாலே அல்லாஹுத்தஆலா அதை செய்து விடுவான். நபி ஸல் அவர்களுக்கும் ஹள்ரத் இப்ராஹீம் அலை அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இறைவனுக்கு எதுவெல்லாம் விருப்பமோ அவை அனைத்தையும் செய்தவர்கள் இப்ராஹிம் அலை அவர்கள். ஆனால் நபி ஸல் அவர்களுக்கு எதுவெல்லாம் விருப்பமுமோ அவை அனைத்தையும் செய்தவன் அல்லாஹ். அப்படி இருக்கிற பொழுது அவர்கள் சொன்ன அந்த ஆமீனுக்கு எவ்வளவு பெரிய பவர் இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. துஆ செய்தர்களும் சாதாரண மனிதர் அல்ல. மலக்குகளுக்கெல்லாம் தலைவர், இறைவனுடைய மேலான நெருக்கத்தை பெற்றவர், உலகத் திருமறை அல்குர்ஆன் ஷரீபை அல்லாஹ்விடமிருந்து நபி ஸல் அவர்களிடம் கொண்டு வரும் பெரும் பேற்றைப் பெற்றவர். இறைவனுடைய செய்திகளை நபிமார்களுக்கு கொண்டு வந்து சேர்க்க கூடிய மாபெரும் உயர்ந்த பணியைச் செய்தவர். சங்கையானவர் என்றும் இறைவனிடத்தில் நன் மதிப்பை பெற்றவர் என்றும் அல்குர்ஆனின் வசனங்களால் போற்றப்பட்டவர். அத்தகைய ஜிப்ரயீல் அவர்களின் துஆ எந்த அளவிற்கு இறைவனிடத்தில் மதிப்பைப் பெற்றதாக இருக்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அதேபோல் நாளை மறுமையில் நபியவர்கள் தான் நமக்கு சுவனத்தைப் பெற்றுத் தரவேண்டும். அவர்களின் சிபாரிசின் பேரில் தான் நாம் சுவனத்தில் அடியெடுத்து வைக்க முடியும். ஆனால் அவர்களே ரமலானில் இறை மன்னிப்பைப் பெறாதவர் நரகம் செல்வார் இறைவனின் அருளை விட்டும் தூரமாகி விடுவார் என்கிற துஆவிற்கு ஆமீன் சொன்னார்கள் என்றால் மன்னிப்பைப் பெற வேண்டிய ரமலானில் கூட மன்னிப்பைப் பெறுவதற்கு முயற்சி செய்யாதவர்கள் பாவமன்னிப்பைப் பற்றிய கவனம் இல்லாதவர்கள் சற்று நிதானித்து இந்த ஹதீஸை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இரண்டாவது இந்த ஹதீஸில் மன்னிப்பை தேடாதவர் நரகம் செல்வார் என்று வரவில்லை. மாறாக மன்னிப்பை பெறாதவர் நரகம் செல்வார் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறது. எனவே மன்னிப்பைக் கேட்டால் மட்டும் போதாது. இறைவனிடம் அந்த மன்னிப்பைப் பெற்றாக வேண்டும்.

இந்த மாதத்தைப் பயன்படுத்திக் கொண்டு நம் பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற வேண்டும். அல்லாஹ் அந்த மேலான மன்னிப்பை நம் அனைவருக்கும் தருவானாக!


Popular posts from this blog

ஹழ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி)

எச்சரிக்கை! இந்த ஐந்து தீய குணங்கள் 30-10-2025

அற்புதங்கள் நிறைந்த ஆஷூரா தினம்...... 12-07-2024 04-07-2025