ரமலானுக்கு பின் நாமும் நம் பிள்ளைகளும் 27-04-23 12-04-24 20-03-2026
ரமலானுக்குப் பின் நாமும் நம் பிள்ளைகளும்.............. 27-04-2023
புண்ணியம் நிறைந்த ரமலான் மாதத்தை நிறைவு செய்துவிட்டு பெருநாளை சிறப்பாக கொண்டாடிவிட்டு ஷவ்வால் மாதத்தின் முதல் ஜூம்ஆவில் அமர்ந்திருக்கிறோம்
காலங்களும் மாதங்களும் நேரங்களும் அதிவேகமாக நம்மை விட்டு நகர்ந்து கொண்டே செல்வதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை அந்த அளவுக்கு மிக வேகமாக நாட்கள் சிட்டாய் பரந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்
பொதுவாகவே ரமலானுக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் பரவலாக காணப்படும் ஒரு செய்தி ரமலானில் இருந்த தொழுகையாளிகள் ரமலானுக்குப்பின் காணவில்லை என்பது தான்
மக்களும் அந்த செய்தியை மெய்ப்பிக்கும் விதமாக ரமலானுக்குப்பின் வருடா வருடம் காணாமல் போய்விடுவதை தொடர்கதையாக ஆக்கிக்கொண்டார்கள்
ஷரீஅத்தின் பார்வையில் ஒரு அமலின் நிலை எப்படி இருக்கவேண்டும் எப்படி இருக்கக்கூடாது என்பதை அறிந்து அதை நாம் கவனத்தில் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்
சங்கைக்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!!!!!!
அமல்களை பொருத்தவரை அதில் நிரந்தரமாக இருக்க வேண்டுமென்பதே அல்லாஹ்வின் எதிர்பார்ப்பு.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் நாம் எந்தளவு முனைப்பு காட்டுகிறோம் என்பதும் நம் பிள்ளைகள் மீது நாம் மார்க்க விஷயத்தில் எப்படி செயல்படுகிறோம் என்பது தான் நம் முன்னால் இருக்கும் மிகப்பெரும் சவாலாகும்.
எனவே நாம் நம் அமல்களில் நிரந்தரத் தன்மையை நமது அன்றாட வாழ்வில் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் நம் பிள்ளைகளின் மார்க்கக் கல்வியின் வளர்ச்சிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பன சில நினைவூட்டல்களை இந்த ஜும்ஆ உரையின் வழியே நாம் அறிந்து கொள்ளவிருக்கிறோம்.
தன் சுக துக்கங்களையெல்லாம் தள்ளி வைத்து, மற்ற மகிழ்ச்சியான விஷயங்களைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு இரவு பகலாக கண் விழித்து சிரமப்பட்டு படித்த மாணவனுக்கு பரீட்சை எழுதியதோடு அவன் கடமை முடிந்து விடுவதில்லை. முடிந்து விட்டதாக அவன் நினைப்பதும் இல்லை. அவன் எதிர்பார்த்த ரிசல்ட் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அது தான் அவனுக்கு உண்மையில் மகிழ்ச்சியைத் தரும். அவன் பட்ட கஷ்டத்திற்கு பலனாக அமையும். கையில் இருந்த நகைகளை விற்று கடன்களை வாங்கி மிகவும் சிரமப்பட்டு ஒரு கடையை திறந்ததோடு ஒரு வியாபாரியின் கடமை முடிந்து விடாது. அதற்குப் பிறகு அவன் எதிர்பார்த்த லாபத்தை அந்த வியாபாரம் ஈட்டித் தர வேண்டும். அது தான் அவனுக்கு உண்மையான வெற்றியும் மகிழ்ச்சியும். அதேபோன்று அமல்களை செய்து முடித்ததோடு நம் கடமை முடிந்து விடுவதில்லை. அமல்கள் செய்த பிறகு, செய்த அமல்கள் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அது தான் நம்முடைய உண்மையான வெற்றி. எனவே அமல்களை செய்த பிறகு அவைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டும். யோசிக்க வேண்டும். அதற்காக கவலைப்பட வேண்டும்.
உலகத்தில் மற்ற விஷயங்களெல்லாம் அதனுடைய முடிவு விரைவில் தெரிந்து விடும். உலகத்திலேயே அதை கண்கூடாக பார்த்து விட முடியும். ஆனால் அமல்களைப் பொறுத்த வரை அது ஏற்றுக் கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பதை ஒருவன் மறுமையில் தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் குறைந்தபட்சம் அவன் கவலைப்பட வேண்டும். அதைக் குறித்து சிந்திக்க வேண்டும்.
அமல் செய்த பிறகு துஆ செய்ய வேண்டும் என்ற சுன்னத்தை பெருமானார் ﷺ அவர்கள் நமக்கு கற்றுத் தந்ததற்கான மிக முக்கியமான காரணமே செய்த அமலைக் குறித்து சிந்திக்க வேண்டும். அதன் கபூலியத்தைக் குறித்து கவலைப்பட வேண்டும் என்பதற்குத் தான்.
தொழுகையின் நோக்கம் பாவங்களைத் தடுப்பது.
اُتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ وَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ
(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீங்கள் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவைகளுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்). (அல்குர்ஆன் : 29:45)
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: سُئِل النَّبِيُّ ﷺ عَنْ قَوْلِ اللَّهِ: ﴿إِنَّ الصَّلاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ﴾ قَالَ: "مَنْ لَمْ تَنْهَهُ صَلَاتُهُ عَنِ الفحشاء والمنكر، فلا صلاة له
இந்த வசனம் குறித்து பெருமானார் ﷺ அவர்களிடத்தில் கேட்கப்பட்ட பொழுது யாருடைய தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும் பாவங்களிலிருந்தும் அவரை தடுக்க வில்லையோ அவருக்கு தொழுகை இல்லை என்றார்கள். (அதாவது அவர் சரியாக தொழ வில்லை, அவருடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை) (இப்னு கஸீர்)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ: إِنَّ فُلَانًا يُصَلِّي بِاللَّيْلِ فَإِذَا أَصْبَحَ سَرَقَ؟ فَقَالَ: "إِنَّهُ سَيَنْهَاهُ
ஒரு மனிதர் நபி ﷺ அவர்களிடத்தில் வந்து இன்ன மனிதர் இரவிலே தொழுகிறார். ஆனால் பகலிலே திருடிக் கொண்டிருக்கிறார் என்று அவரைப் பற்றி கூறிய பொழுது, நபியவர்கள், நிச்சயமாக அவருடைய தொழுகை அந்த குற்றத்திலிருந்து அவரைத் தடுக்கும் என்றார்கள். (இப்னு கஸீர்)
தொழுகை பாவங்களைத் தடுக்கும் என்பது அல்லாஹ் ரஸூலின் வாக்குறுதி. அது பொய்யாகாது. ஒருவர் தொழுது கொண்டே பாவம் செய்கிறார் என்றால் அவர் சரியாக தொழ வில்லை. அல்லது அத்தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்று விளங்கிக் கொள்ளலாம். ஒருவர் 100 % பாவங்கள் செய்கிறார் என்றால் அவருடைய தொழுகை 100 % ஏற்கப்பட வில்லை. ஒருவர் 50 % பாவங்கள் செய்கிறார் என்றால் அவருடைய தொழுகை 50 % ஏற்கப்பட வில்லை என்று பொருள்.
ஜகாத்தின் நோக்கம் பொருளைப் பாதுகாப்பது.
عن جابر بن عبد الله:] قال رجُلٌ مِن القومِ: يا رسولَ اللهِ أرأَيْتَ إذا أدّى رجُلٌ زكاةَ مالِه فقال رسولُ اللهِ مَن أدّى زكاةَ مالِه فقد ذهَب عنه شرُّه
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஒருவர் தன்னுடைய பொருளுக்குரிய ஜகாத்தை நிறைவேற்றி விட்டால் (அதற்காக அவருக்கு கிடைக்கும் பலன் என்ன) என்று கேட்டார். அப்போது நபி ﷺ அவர்கள் ஒருவர் தன் பொருளுக்குரிய ஜகாத்தை நிறைவேற்றி விட்டால் அந்த பொருளுடைய ஆபத்து அவரை விட்டும் நீங்கி விடும் என்றார்கள். (தப்ரானீ)
ஒரு பொருளில் அதற்குரிய ஜகாத் கொடுக்கப்பட்டு விட்டால் அந்த பொருளில் அல்லது அந்த பொருளின் மூலம் ஏற்படும் ஆபத்திலிருந்து அவர் பாதுகாக்கப்படுவார்.அந்தப் பொருளும் பாதுகாக்கப்படும். அந்த பொருள் திருடப்படாது. வீண் விரயங்களில் செலவழியாது. அந்த பொருள் அழிந்து போகாது. அதன் மூலம் அவருக்கு எந்த ஆபத்தோ சோதனையோ ஏற்படாது என்பது இந்த ஹதீஸின் பொருள். ஒருவர் ஜகாத் கொடுத்தும் அவருக்கு பொருளிலோ அல்லது பொருளின் மூலமோ ஆபத்து ஏற்படுகிறது என்றால் அவர் கொடுத்த ஜகாத் ஏற்கப்பட வில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
ஹஜ்ஜின் நோக்கம் வாழ்க்கை பரிசுத்தமாகுவது.
قال بعض السلف: "علامة بر الحج أن يزداد بعده خيرًا، ولا يعاود المعاصي بعد رجوعه"،
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் அடையாளம் என்பது ஹஜ்ஜிற்குப் பிறகு அவர் நற்காரியங்களை அதிகப்படுத்த வேண்டும். பாவத்தின் பக்கம் மீளாமல் இருக்க வேண்டும்.
وقال الحسن البصري - رحمه الله -: "الحج المبرور أن يرجع زاهدًا في الدنيا، راغبًا في الآخرة
உலக ஆசை விலகி மறுமையின் காரியங்களில் ஆர்வம் கொள்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் அடையாளமாகும் என்று ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
ஹஜ்ஜிற்கு சென்று வந்த பிறகு ஒருவர் நன்மைகளை அதிகப்படுத்த வில்லை, பாவங்களை செய்து கொண்டிருக்கிறார் என்றால் அவருடைய ஹஜ் ஒப்புக் கொள்ளப்பட்ட வில்லை என்று பொருள்.
நோன்பின் நோக்கம் இறையச்சம் ஏற்படுவது.
يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம். (அல்குர்ஆன் : 2:183)
நோன்பிற்கு முன்பு இருந்ததை விட நோன்பிற்குப் பிறகு இறையச்சம் அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால் அவரின் நோன்பு கபூலாக வில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.இறையச்சம் என்பதற்கு இமாம்கள் கூறும் விளக்கம் ; அல்லாஹ் ஏவிய காரியங்களை செய்வது. அவன் தடுத்த காரியங்களை விட்டு விடுவது. இந்த விளக்கத்தை வைத்து ஒவ்வொருவரும் தங்களது நோன்பு எந்தளவு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை எடை போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ரமலானுக்குப் பிறகும் ஒருவர் அமல் செய்கிறார் என்றால் அவரை அல்லாஹ் பொருந்திக் கொண்டான் என்று அர்த்தம். ஏனென்றால் அல்லாஹ் யாரைப் பொருந்திக் கொண்டானோ அவர்களுக்குத் தான் அந்த நஸீபை வழங்குகிறான்.
ஆனால் இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்தின் சூழ்நிலை, ரமலானில் மட்டும் தான் நற்காரியங்களை செய்வது, பாவங்களை விட்டும் விலகி இருப்பது. ரமலான் கடந்து சென்று விட்டால் மீண்டும் பழைய நிலை திரும்பி விடும். கடமைகளை விட ஆரம்பித்து விடுவார்கள். பாவங்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
ورأى وهب بن الورد قوماً يعبثون حراماً بعد رمضان فقال: "إن كان هؤلاء تقبل منهم صيامهم فما هذا فعل الشاكرين، وإن لم يتقبل منهم صيامهم فما هذا فعل الخائفين!".
வஹ்ப் பின் அல்வர்த் ரஹ் அவர்கள் ரமலானுக்குப் பிறகு ஹராமான காரியங்களை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தைப் பார்த்த பொழுது ரமலான் காலங்களில் இவர்கள் நோற்ற நோன்புகள் கபூலாகி இருந்தால் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். கபூலாக வில்லையென்றால் அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். ஆனால் இவர்கள் செய்யக்கூடிய இந்த காரியம் நன்றி செலுத்தக் கூடியவர்களின் செயலும் அல்ல. அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களின் செயலும் அல்ல என்று கூறினார்கள்.
قال يحي بن معاذ :" من استغفر بلسانه وقلبه على المعصية معقود , وعزمه أن يرجع إلى المعصية بعد الشهر ويعود , فصومه عليه مردود , وباب القبول في وجهه مسدود
ஒருவரின் உள்ளம் பாவத்தின் மீது தொடர்புடையதாக இருக்கும் நிலையில், பாவத்தின் பக்கம் திரும்ப வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருக்கும் நிலையில் நாவளவில் அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்புத் தேடி, அந்த பாவத்தின் பக்கம் திரும்பி விட்டால் அவருடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்படாது. கபூலியத்தின் வாசல் அவருக்கு அடைக்கப்பட்டு விடும் என்று யஹ்யா பின் முஆத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
قيل لبشر الحافي: إن أناساً يجتهدون في رمضان فإذا خرج تركوا، فقال: بئس القوم لا يعرفون الله إلا في رمضان.- اَلله يُعبد في كل وقت وفي كل حين، فالإنسان يداوم على الشيء ولو كان قليلاً أولى من الإكثار من العبادة في وقت ثم الإهمال بعد ذلك
மக்களில் சிலர் ரமலான் காலங்களில் மட்டும் அதிகம் முயற்சி செய்து நன்மைகளை செய்கிறார்கள். ரமலான் கடந்து சென்று விட்டால் எல்லாவற்றையும் விட்டு விடுகிறார்கள். இவர்களைப் பற்றி உங்களின் அபிப்ராயம் என்ன என்று பிஷ்ருல் ஹாஃபி ரஹ் அவர்களிடத்தில் கேட்கப்பட்ட பொழுது, ரமலானில் மட்டுமே அல்லாஹ்வை அறிந்து கொள்கிற இவர்கள் மக்களிடையே மிக மோசமானவர்கள். அல்லாஹ்வை எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் வணங்க வேண்டும். மனிதன் எந்த காரியத்தை செய்தாலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டு பின்பு ஒரேடியாக விட்டு விடுவதை விட சின்ன அமலை செய்தாலும் அதை தொடர்படியாக செய்வது மிக ஏற்றமானது என்றார்கள்.
عن عائشة رضي الله عنها قالت: (كان رسول الله صلى الله عليه وسلم إذا عمل عملاً أثبته
நபி அவர்கள் எந்த அமலைச் செய்தாலும் விடாமல் தொடர்ந்து செய்பவர்களாக இருந்தார்கள். (ஸஹீஹுல் ஜாமிவு)
اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ
எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து (அவர்களை நோக்கி) "நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியைக் கொண்டு சந்தோஷ மடையுங்கள்" என்றும், (அல்குர்ஆன் : 41:30)
நிரந்தரத் தன்மையின் நிகரற்ற சிறப்பு
அல்குர்ஆனில் முஃமின்களின் பண்புகளைப் பற்றி பேசுகின்ற இறை வசனங்களில் பின்வரும் இறை வசனமும் ஒன்று;
الَّذِيْنَ هُمْ عَلٰى صَلَاتِهِمْ دَآٮِٕمُوْنَۙ
(அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.
(அல்குர்ஆன் : 70:23)
இந்த வசனத்தின் கீழ் இமாம் ஸஃதீ(ரஹ்) அவர்கள் பின்வரும் விளக்கங்கள் கூறுகிறார்கள்;
நேரங்களை தவறாமல் கடைபிடித்தல்
நிபந்தனைகளை பேணுதல்
பரிபூரணமாக நிறைவேற்றுதல்
குறைவில்லாமல் அமல் செய்தல்
அமல்கள் விஷயத்தில் இவை அனைத்தும் கடைபிடிக்கப்பட வேண்டும்.
முதலில் தொழுகையில் நிரந்தரம்
நபிமார்களுக்கு அல்லாஹ்வின் வசிய்யத் தொழுகை விஷயத்தில் இருந்தது என்பதை இறைமறை வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன;
ஈஸா(அலை)அவர்கள தன்னைப்பற்றி குறிப்பிடுகின்ற செய்தியை குர்ஆன் பதிவு செய்கிறது;
وَاَوْصٰنِىْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَيًّا
“மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 19:31)
நம்முடைய இறுதித்தூதர் முஹம்மது(ஸல்)அவர்களுக்கு அல்லாஹ் கூறிய கட்டளை பின்வரும் வசனமாகும்;
وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ
உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!
(அல்குர்ஆன் : 15:99)
இமாம் இப்னு கஸீர்(ரஹ்)அவர்கள் "தொழுகை போன்ற எல்லா அமல்களிலும் அடியான் உறுதியான நிலைப்பாடு கொண்டவனாக இருக்க வேண்டும்" என்கிறார்கள்.
பின்வரும் நபிமொழி இந்த கருத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது;
நபி(ஸல்)அவர்கள் தனக்கு பின்வருமாறு உபதேசம் செய்ததாக இம்ரான் இப்னு ஹுஸைன்(ரளி)பின்வருமாறு கூறினார்கள்;
عن عمران بن حُصين رضي الله عنهما قال: قال لي النبي صلى الله عليه وسلم:
صلِّ قائمًا، فإن لم تستطع فقاعدًا، فإن لم تستطع فعلى جنبٍ
رواه البخاري.
தொழுகையை நின்ற நிலையில் நிறைவேற்றுவீராக;அதற்கு நீர் சக்தி பெறாவிட்டால் உட்கார்ந்த நிலையில் நிறைவேற்றுங்கள்;அதற்கும் சக்தி பெறாவிட்டால் உங்களுடைய விலாப் புறங்களில் படுத்த நிலையிலாவது நிறைவேற்றுங்கள்.
ஆக தொழுகையை விடுவதற்கோ தகுந்த காரணமின்றி கலா செய்வதற்கோ அனு அளவும் அனுமதி இல்லை என்பதை நாம் இங்கே உணர கடமைப்பட்டுள்ளோம்
எனவே அவசியம் நாம் இமாம் ஜமாஅத்துடன் தொழ முயற்சிக்க வேண்டும் முயற்சி செய்வது மட்டுமல்ல அது தான் நம் தலையாய கடமை ஆகும்
பாங்கு கூறியதற்கு பின்னால் தொழுகைக்கு தயாராகுவதைத்தவிர செய்யும் மற்ற எந்த காரியங்களிலும் எந்த பயனும் இல்லை என்பதை இமாம்கள் நமக்கு அனுபவப்பூர்வமாக கற்றுத்தரும் பாடம் ஆகும்
புகாரி
*அல்லாஹ்விற்கு அதிக பிரியத்திற்குரிய அமல்*
அன்னை ஆயிஷா(ரளி)அவர்கள் அறிவிக்கிறார்கள்;
மக்களுக்கு நபியவர்கள் பின்வருமாறு உபதேசித்தார்கள்;
يَا أَيُّهَا النَّاسُ خُذُوا مِنَ الأَعْمَالِ مَا تُطِيقُونَ، فَإِنَّ اللَّهَ لاَ يَمَلُّ حَتَّى تَمَلُّوا، وَإِنَّ أَحَبَّ الأَعْمَالِ إِلَى اللَّهِ مَا دَامَ وَإِنْ قَلَّ
மக்களே!அமல்களில் நீங்கள் எதற்கு சக்தி பெறுவீர்களோ அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;
நிச்சயமாக!நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைவதில்லை; அமல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது,குறைவாக இருப்பினும் அவற்றை நிரந்தரமாகச் செய்வதே!
புகாரி-முஸ்லிம்
நபியவர்களின் குடும்பத்தார்கள் ஒரு அமலைச் செய்தால் அதில் நிரந்தரத் தன்மையுடையவர்களாக இருப்பார்கள்.
(நிரந்தரத் தன்மையும்,பலன்களும்)
தொடர்ந்து அமல் செய்வதைக் கொண்டு
01. ஈமான் அதிகரிக்கும்
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்;
நீங்கள் உண்மையை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்;அது நேர்வழிக்கு உங்களை அழைத்துச் செல்லும்; அந்தக் காலமெல்லாம் நீங்கள் உண்மையாளர்களென எழுதப்படுவீரர்கள்.
தொடர்ந்து அமல் செய்வதைக் கொண்டு
*02. பொடுபோக்கு தனம் நீங்கிவிடும்*
அல்லாஹ் கூறுகிறான்;
وَاذْكُرْ رَّبَّكَ فِىْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِيْفَةً وَّدُوْنَ الْجَـهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِيْنَ
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.
(அல்குர்ஆன் : 7:205)
தொடர்ந்து அமல் செய்வதைக் கொண்டு
*03.நெருக்கடிகளிலிருந்து ஈடேற்றம்*
நபி யூனுஸ்(அலை)அவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு விவரிக்கிறது;
فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَ مِنَ الْمُسَبِّحِيْنَۙ
ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -
(அல்குர்ஆன் : 37:143)
لَلَبِثَ فِىْ بَطْنِهٖۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ
(மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.
(அல்குர்ஆன் : 37:144)
فَنَبَذْنٰهُ بِالْعَرَآءِ وَهُوَ سَقِيْمٌ
ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.
(அல்குர்ஆன் : 37:145)
தொடர்ந்து அமல் செய்வதைக் கொண்டு
*04.இயலாமைக் காலத்திலும் கூலி வழங்கப்படும்*
நபி(ஸல்)கூறினார்கள்;
إِذَا مَرِضَ العَبْدُ أَوْ سَافَرَ كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا
ஒரு அடியான் நோயுற்றாலும் அல்லது பயணத்தில் ஆகிவிட்டாலும் அவன் பயணம் இல்லாத,நோயில்லாத காலகட்டத்தில் எவ்வாறு செயல்பட்டானோ அதுபோன்றே கூலி வழங்கப்படும்.
புகாரி
தொடர்ந்து அமல் செய்வதைக் கொண்டு
*05. இறுதி முடிவு நல்லதாக அமையும்*
*06. நரக விடுதலை கிடைக்கும்*
كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
(அல்குர்ஆன் : 3:185)
தொடர்ந்து அமல் செய்வதைக் கொண்டு
*07. சுவனத்தில் பிரவேசம்*
அல்லாஹ் உபதேசிக்கிறான்;
وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ
இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் : 3:133)
الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:134)
*அமல்களில் நிரந்தரத் தன்மை ஏற்பட அழகிய வழிமுறைகள்*
▪️அல்லாஹ்விடம் மன்றாடுதல்
நிரந்தர தன்மைக்கு பின்வரும் துஆவை குர்ஆன் கற்றுத் தருகிறது;
رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)
(அல்குர்ஆன் : 3:8)
சிந்திக்க வேண்டிய தருணம் இது
ரமலான் முடிந்து சரியாக பத்து நாட்கள் ஆகிறது கடந்த 10 நாட்களாக நாம் என்ன செய்தோம்
ரமலானிலே இருந்த எந்தெந்த அமல்கள் இந்த பத்து நாட்களாக நம்மிடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது எந்த அமலை செய்யத்தவறினோம் என்பதை நாம் இப்போது சுயப்பரிசோதனை செய்ய வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்
நபித்தோழர் முஆது(ரலி)அவர்களுக்கு அண்ணல் நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனையும் மிகப் பிரபலமானதாகும்;
اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك
▪️நல்லோர்களின் தொடர்பு
குர்ஆன் பின்வருமாறு உபதேசிக்கிறது;
وَاصْبِرْ نَـفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ وَلَا تَعْدُ عَيْنٰكَ عَنْهُمْ تُرِيْدُ زِيْنَةَ الْحَيٰوةِ الدُّنْيَا وَ لَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰٮهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا
(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது.
(அல்குர்ஆன் : 18:28)
▪️கெட்ட முடிவை பயப்படுதல்
நம்முடைய அமல்களில் நிரந்தரத் தன்மை ஏற்படுவதற்கு நம்முடைய முடிவுகள் கெட்டதாக அமைந்து விடுமோ என்கின்ற அச்சம் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நம்முடைய அமல்களும் நிரந்தர தன்மையுடையதாக இருக்கும்.
பல நபித்தோழர்களும் இந்த பண்பை பற்றி பிடித்தவர்களாக இருந்தார்கள்;
இந்தப் பண்பின் காரணமாகவே மிக உயர்ந்த இடத்தை அல்லாஹ்விடம் அவர்கள் அடைந்து கொண்டார்கள்.
அப்படிப்பட்டவர்களில் மிக முக்கியமான நபித்தோழர்தான் மாயிஸ்(ரளி)அவர்கள்.
தன்னுடைய முடிவு இம்மையிலும், மறுமையிலும் இறைப் பொருத்தம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் வெளிப்பாடாக, விபச்சாரம் செய்துவிட்டு அது அடுத்தவர்களுக்கு தெரிந்தாலும் பரவாயில்லை அல்லாஹ்விடம் தான் குற்றவாளியாக ஆகிவிடக்கூடாது, என்னுடைய இறுதி முடிவு மோசமானதாக அமைந்துவிடக்கூடாது என்று உறுதி கொண்டவர்களாக தன் தவறை தூதர்(ஸல்)அவர்களிடம் முறையிட்டு அதற்கான தண்டனையை பெற்றுக் கொண்டார்கள்.
இவைகளெல்லாம் நிரந்தரமாக நாம் நல்வழியில் நிலைத்திருப்பதற்கான வழிமுறைகளாகும்.
ரமலான் மாதம் வந்தது,நாங்கள் அமல் செய்தோம்;அந்த மாதம் முடிந்துவிட்டது, அதனால் எங்களுடைய அமல்களும் முடிந்துவிட்டது என்றில்லாமல் எப்போதும் அமல்களுக்கு சொந்தக்காரர்களாக நாம் நிலைத்திருக்க முயற்சிப்போம்.
அல்லாஹ் அதற்கான எல்லா வாய்ப்புகளையும் நமக்கு ஏற்படுத்தித் தருவானாக!ஆமீன்.
அடுத்த படியாக நாம் ரமலானுக்குப்பின் நம் பிள்ளைகளின் நிலையை சற்று கவனிக்க வேண்டிய தருணம் இது
பொதுவாகவே
ஷவ்வால் மாதம் என்பது உலகம் முழுக்க அரபு மதரஸாக்கள், அல்லாஹ்வின் வேதமும் அண்ணல் நபியின் உயர்ந்த வாழ்வியல் நெறிமுறைகளும் கற்றுத் தரப்படுகின்ற அரபுக்கல்லூரிகள் மற்றும் மக்தப் மதரஸாக்கள் திறக்கப்படுகிற ஒரு நேரம். இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் இஸ்லாமியக்கல்லூரிகள் திறக்கப்படுகின்ற, அதன் புதிய ஆண்டை தொடங்கயிருக்கிற நேரம் இது.
மக்தப் என்கிற அடித்தளத்தின் மீது வளர்ந்தவர்கள் நாம் அனைவரும். அன்றிலிருந்து இன்றுவரை நம் இஸ்லாமியர்களிடம் மார்க்கத்தின் தன்னிகரற்ற மிகப் பெரிய மீடியாவாக,மார்க்கத்தோடு ஒரு இஸ்லாமியனை இணைக்கும் மிகப் பெரிய பாலமாக விளங்கிக் கொண்டிருக்கிற மக்தப் மத்ரசாக்களின் இன்றைய நிலை,சமீபகாலமாக நம் தமிழக உலமாக்களை அதிக கவலைக்கும் சிந்தனைக்கும் ஆட்படுத்தியிருக்கின்றன.
ஒட்டுமொத்த இந்திய தேசத்திலும் பள்ளி செல்லும் குழந்தைகளில் வெறும்3% குழந்தைகள் மட்டுமே மதரஸாவிற்கு செல்கிறார்கள் என இஸ்லாமியர்களின் அரசியல், சமூக, பொருளாதார நிலைமை தாழ்ந்து போனதின் காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசால் கடந்த 2000 ஆண்டு அமைக்கப்பட்ட சச்சார் குழுவால் வழங்கப்பட்ட ஆய்வின் முடிவு இது.இந்த நேரத்தில் மார்க்க கல்வியின் மகத்துவம் குறித்து சிந்திக்க வேண்டும்.
ஹிஜ்ரி 50 பனு உமையாவின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.பனு உமையா என்பது உமர் பின் அப்துல் ஆஜீஸ், அப்துல் மலிக் பின் மர்வான் போன்ற பெரும் பெரும் கலீஃபாக்கள் இடம் பெற்றிருக்கிற ஒரு மாபெரும் சாம்ராஜ்யம். அந்த பனூ உமையா ஆட்சி காலத்தில் வாழ்ந்தவர் அபூரபீஆ என்று அழைக்கப்படுகிற ஒரு மாமனிதர். அவரைக்குறித்த அழகான வரலாறு ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
وكان (فروخ) أبو رَبِيعةَ خرج في البعوث إلى خراسان أيام بني أُمَيَّة غازيا، ورَبِيعةُ حمل في بطن أمه، وخلف عند زوجته (أم رَبِيعة) ثلاثين ألف دينار، فقَدِم المدينة بعد سبع وعشرين سنة، وهو راكب فرسًا، وفي يده رمح، فنزل ودفع الباب برمحِه، فخرج ربيعة، وقال: يا عدو الله، أتهجم على منزلي؟ فقال (فروخ): يا عدو الله، أنتَ دخلتَ على حرمي، فتواثبا حتى اجتمع الجيران، وبلغ مالك بن أنس، فأتوا يُعِينون رَبِيعة، وكثر الضجيج، وكل منهما يقول: لا فارقتُك، فلما بصروا بمالك سكتوا، فقال مالك: أيها الشيخ، لك سَعة في غير هذه الدار، فقال الشيخ: هي داري، وأنا (فروخ)، فسمعت امرأتُه كلامه، فخرجتْ وقالت: هذا زوجي، وهذا ابني الذي خلفه وأنا حامل به. فاعتنقا جميعًا وبكيا، ودخل فروخ المنزل، وقال: هذا ابني؟ فقالت: نعم. قال: أخرجي المال الذي عندك، قالت - تُعرِّض -: قد دفنتُه وأنا أخرجه، ثم خرج ربيعةُ إلى المسجد، وجلس في حلقته، فأتاه مالك والحسن، وأشراف أهل المدينة، وأحدق الناس به. فقالتْ أمه لزوجها فروخ: اخرجْ فصلِّ في مسجد رسول الله - صلى الله عليه وسلم - فخرج، فنظر إلى حلقة وافرة، فأتاها فوقف عليها، فنكس ربيعة رأسه يوهمه أنه لم يرَه، وعليه قَلَنْسوة طويلة، فشكَّ أبوه فيه، فقال: مَن هذا الرجل؟ فقيل: هذا رَبِيعة بن أبي عبدالرحمن، فقال: لقد رفع الله ابني، ورجع إلى منزله، وقال لوالدته: لقد رأيتُ ولدَكِ على حالة ما رأيتُ أحدًا من أهل العلم والفقه عليها، فقالتْ أمه: فأيهما أحب إليك: ثلاثون ألف دينار، أم هذا الذي هو فيه؟ فقال: لا والله، بل هذا، فقالت: أنفقت المال كله عليه، قال: فوالله، ما ضيعتِه"؛[3] ا.
அபூரபீஆ ரஹ் அவர்கள், அவர்களது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர்களிடத்தில் மூவாயிரம் தீனார்களை கொடுத்து விட்டு போருக்காக ஊரை விட்டு கிளம்பி சென்றார்கள். ஏறக்குறைய 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கு திரும்பினார்கள். கையிலே ஈட்டியோடு குதிரையில் வந்து இறங்கினார்கள். தன் வீட்டின் கதவை தட்டிய போது உள்ளிருந்து ஒருவர் வந்தார். கையில் ஆயுதத்தைப் பார்த்தவுடன் என் வீட்டை தகர்ப்பதற்கு வந்திருக்கிறாயா என்று கேட்டார். அதற்கவர்கள் என் வீட்டிலிருந்து வருகிறாயே நீ யார் என்று அவர்கள் கேட்டார்கள். இல்லை இது என் வீடு என்று இருவருக்கும் வாக்குவாதமும் சற்று கைகலப்பும் ஏற்பட்டது. அதைப் பார்த்து ஊர் ஒன்று கூடியது. என்ன பிரச்சனை என்று கேட்டார்கள். இவர் ஆயுதத்தோடு என் வீட்டிற்கு வந்திருக்கிறார். என் வீட்டை இடிப்பதற்கு முயற்சிக்கிறார் என்று சொன்னார். நீங்கள் யார் நீங்கள் இங்கிருந்து சென்று விடுங்கள் என்று மக்கள் கூறியபோது, அவர் நான் அபூரபீஆ என்று கூறினார்கள். இதை கேட்டவுடன் உள்ளிருந்து அவர்கள் மனைவி ஓடோடி வந்து இவர் என்னுடைய கணவர். இவர் என்னுடைய மகன் என்று சொன்னார்கள். உடனே இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு மகிழ்ச்சியை பரிமாறினார்கள். பிறகு தன்னுடைய மனைவியிடம் நான் உன்னிடத்தில் கொடுத்த 3000 தீனார்களை எனக்குத் திருப்பிக் கொடு என்று கேட்டார்கள். நான் ஒரு இடத்தில் புதைத்து வைத்திருக்கிறேன் பிறகு எடுத்து தருகிறேன் என்று கூறிய மனைவி, நீங்கள் பள்ளிக்கு சென்று தொழுது விட்டு வாருங்கள் என்று கூறினார்கள். அவர்கள் பள்ளிக்குச் சென்ற பொழுது அங்கே ஒருவர் கம்பீரத்தோடு கண்ணியமான ஆடைகளை உடுத்தி கிரீடம் அணிந்து மக்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். இவர் யார் என்று கேட்டார்கள். இவர் தான் ரபீஆ என்று சொல்லப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் என் மகனின் அந்தஸ்தை உயர்வாக்கி விட்டான் என்று சந்தோஷப்பட்டு தன் இல்லத்திற்கு வந்து தான் பார்த்ததை மனைவிடத்தில் கூறியபோது அவர்களது மனைவி கேட்டார்கள் : உங்களுக்கு உங்கள் மகனின் இந்த அந்தஸ்து முக்கியமா அல்லது நீங்கள் கொடுத்துச் சென்ற 3 ஆயிரம் தினார்கள் முக்கியமா ?. இல்லை என் மகனை இந்த அந்தஸ்தில் பார்ப்பது தான் எனக்கு மிக முக்கியம் என்று அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அவர்களின் மனைவி நீங்கள் கொடுத்த அத்தனை காசுகளையும் உங்கள் மகனின் கல்விக்காக நான் செலவு செய்தேன் என்று கூறினார்கள். அதைக்கேட்ட அபூரபீஆ நீ பணத்தை நல்ல வழியில் தான் செலவு செய்திருக்கிறாய். வீணாக்க வில்லை என்று கூறினார்கள். (ஸிஃபதுஸ் ஸஃப்வா)
இந்த வரலாற்றில் நமக்கு 2 அழுத்தமான செய்திகள் உண்டு.முதல் செய்தி ; தற்போது பெண்களின் நிலையை எண்ணிப் பார்க்கிறோம். ஓரிரு வருடங்களுக்கு முன்னால் தன் குழந்தையை கவனிக்காமல் குடும்பத்தை கவனிக்காமல் நாள் முழுக்க டிக்டாக்கில் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்த பெண்ணை கணவன் கண்டிக்கிறார்.இதனால் வேதனையடைந்த அந்தப்பெண் விஷம் குடித்து அதையும் டிக்டாக்கிலேயே பதிவு செய்து விட்டு இறந்து போய் விட்டாள். இன்று கணவர் வீட்டில் இல்லையென்றாலே பெண்களின் நடவடிக்கையும் போக்கும் மாறிவிடுகிற காலம்.ஆனால் கணவர் கொடுத்த அந்த 30000 தீனாரையும் வீண்விரயம் செய்யாமல் உலகத்தினுடைய காரியங்களில் செலவழிக்காமல் தன் மகனை மிகப்பெரிய ஆலிமாக மார்க்க அறிஞராக சட்ட வல்லுனராக உருவாக்குவதற்கு பயன்படுத்திய அந்தப் பெண். 2வது செய்தி இலவசமாக கிடைக்கிற மார்க்க கல்வியை ஏறெடுத்தும் பார்க்காமல் உலகப் படிப்புக்காக லட்ச லட்சமாக செலவு செய்து கொண்டிருக்கிற இன்றைய காலச்சூழலில் தான் கொடுத்த 30000 தீனாரையும் மகனின் மார்க்க படிப்புக்காக செலவழித்து விட்டேன் என்று மனைவி சொன்ன போது சற்றும் கோபப்படாமல் பணத்தை நீ வீணடிக்காமல் சரியாகத்தான் பயன்படுத்தியிருக்கிறாய் என்று சொன்ன அந்த மாமனிதர்.
அன்றைக்கு வாழ்ந்த இஸ்லாமிய சமூகம் தங்களுடைய பொருளாதாரம் பணம் காசுகள் உழைப்புக்கள் முயற்சிகள் ஏன் தங்கள் வாழ்க்கை முழுக்க மார்க்கத்திற்காக செலவு செய்தார்கள்.அதற்கு முக்கியத்துவம் தந்தார்கள்.
ஆனால் இன்றைக்கு நாம் உலகப்படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம், முன்னுரிமை வழங்குகிறோம். நமது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும், படிப்பிலே பல சாதனை புரிந்து நாளை ஒரு டாக்டராக, ஒரு இஞ்சினியராக ஒரு வக்கீலாக அல்லது சமூகம் மதிக்கிற ஒரு நிலையில் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.அதற்காக நம் குழந்தைகளுக்கு உலக கல்வியில் அதிக ஊக்கத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறோம். ஆனால் சமூகத்தில் மிகச்சிறந்த ஆலிமாக குர்ஆனைக் கற்றுத் தேர்ந்த ஒரு ஹாஃபிழாக மறுமையில் நம்மை சுவனத்திற்கு அழைத்துச் செல்கிற நல்ல மக்களாக அவர்களை உருவாக்க முயற்சிப்பதில்லை.
நம் குழந்தைகளின் உலகக்கல்விக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை அவர்களின் மார்க்க கல்விக்கு நாம் கொடுப்பதில்லை.அதற்குக் காரணம் ஒன்று தான் உலகக்கல்வியின் மதிப்பையும் மகத்துவத்தையும் விளங்கியிருக்கிற நாம் மார்க்க கல்வியின் மதிப்பையும் மகத்துவத்தையும் விளங்க வில்லை.
மார்க்க கல்வியின் மகத்துவம் உணர்த்தப்பட வேண்டும்.நம் பிள்ளைகள் உணர்கிறார்களோ இல்லையோ நாம் முதலில் மார்க்க கல்வி குறித்த ஒரு விழிப்புணர்வை இஸ்லாமிய கல்வி குறித்த ஒரு awareness ஐ பெறுவது காலத்தின் கட்டாயம்.
நபி ஸல் அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த நேரம்,உலகத்தில் குர்ஆன் அருளப்பட்ட நேரம் நமக்கெல்லாம் தெரியும்.அன்றைக்கு இருந்த மக்கள் ஷிர்க்கில் மூழ்கிக் கிடந்தார்கள்,கற்களை மட்டுமல்ல கண்ணில் பட்டதையெல்லாம் கடவுளாக்கி வணங்கிக் கொண்டிருந்தார்கள்,புனித ஆலயம் என்று சொல்லப்படுகிற கஃபாவுக்குள்ளேயே நூற்றுக்கணக்கான சிலைகளை வைத்திருந்தார்கள். நிர்வானமாக கஃபாவை தவாஃப் செய்யும் அளவுக்கு வெட்கமே இல்லாத சமூகமாக இருந்தார்கள், குலத்தைக் கொண்டும், கோத்திரத்தைக் கொண்டும், இனத்தைக் கொண்டும், நிறத்தைக் கொண்டும் பெருமை பேசித்திரிந்தார்கள், சின்ன சின்ன பிரச்சனை களுக்கெல்லாம் காலம் காலமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கும் அறக்க குணமுடையவர்களாக வாழ்ந்து வந்தார்கள். அந்த நேரத்தில் தான் அல்லாஹ் நபி ஸல் அவர்களுக்கு நபித்துவத்தை கொடுத்தான். குர்ஆனை இறக்கினான்.இத்தனை அவலங்களுக்கு மத்தியில் குர்ஆனை இறக்கிய அல்லாஹ் அதன் முதல் வசனத்தில் தவ்ஹீதைப்பற்றி சொல்லியிருக்கலாம், ஒழுக்கத்தைப்பற்றி சொல்லியிருக்கலாம், ஒற்றுமையைப்பற்றி சொல்லியிருக்கலாம், சகோதரத்துவத்தைப் பற்றி சொல்லியிருக்கலாம், பெண்களின் பெருமையைப் பற்றி சொல்லியிருக்கலாம். ஆனால் இவற்றில் எதையும் சொல்லாமல் அவன் சொன்ன முதல் விஷயம் اقرأ படி என்பது தான்.காரணம் மார்க்க கல்வி வந்து விட்டால் மார்க்கத்தின் அறிவு வந்து விட்டால் எல்லாம் வந்து விடும்.
அன்றைக்கு எதிர்மறையான அத்தனை சூழ்நிலைகள் இருந்தும் அதைப்பற்றியெல்லாம் வசனத்தை அருளாமல் கல்வியைப்பற்றி முதல் வசனத்தை இறக்கியதன் மூலம் நீங்கள் குர்ஆனைப் படியுங்கள் உங்களுக்கு எல்லாம் கிடைத்து விடும்.குர்ஆனை ஓதுங்கள் உங்களுக்கு தவ்ஹீது கிடைக்கும். குர்ஆனை ஓதுங்கள் உங்களுக்கு ஒழுக்கம் கிடைக்கும். குர்ஆனை ஓதுங்கள் உங்களிடம் ஒற்றுமை ஏற்படும், குர்ஆனை ஓதுங்கள் உங்களிடம் சகோதரத்துவம் மலரும். குர்ஆனை ஓதுங்கள் உங்களிடமிருந்து தற்பெருமை விலகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் குர்ஆனை ஓதினால் தேவையானது அனைத்தும் கிடைக்கும்.தேவையில்லாதது அனைத்தும் விலகும் என்பதை அல்லாஹுத்தஆலா அவன் இறக்கிய முதல் வசனத்தின் மூலம் இவ்வுலகத்திற்கு சொல்லி விட்டான்.
கல்வியை பற்றி இஸ்லாம் உயர்த்திப்பேசியளவுக்கு வேறு எந்த மதமும் பேசியதில்லை. வணக்கவழிபாடுகளை விட கல்வியே உயர்த்தது என இஸ்லாம் கூறுகிறது.
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّكَ إِذَا تَعَلَّمْتَ بَابًا مِنَ الْعِلْمِ كَانَ خَيْرًا لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ أَلْفَ رَكْعَةٍ تَطَوُّعًا مُتَقَبَّلَةٍ، وَإِذَا عَلَّمْتَ النَّاسَ عُمِلَ بِهِ أَوْ لَمْ يُعْمَلْ بِهِ فَهُوَ خَيْرٌ لَكَ مِنْ أَلْفِ رَكْعَةٍ تُصَلِّيهَا تَطَوُّعًا مُتَقَبَّلَةٍ
கல்வியில் ஒரு பாடத்தை நீ கற்றுக்கொண்டால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆயிரம் இரக்கஅத் நபில் தொழுவதை விட சிறப்பானது.அவ்வாறு நீ கற்றதை பிறருக்கு கற்றுக்கொடுத்தால் அதுவும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆயிரம் இரக்கஅத் நபில் தொழுவதை விட சிறப்பானது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (தர்கீப்)
ஒருவன் இறை நெருக்கத்தைப் பெறுவதற்கு வணக்கமும் தொழுகையும் காரணமாக இருந்தாலும் அந்த வணக்கத்திற்கும் தொழுகைகளுக்கும் அடிப்படை மார்க்க ஞானம் தான்.மார்க்க ஞானம் இல்லையென்றால் அந்த வணக்கம் கூட சில நேரங்களில் பலன் தராமல் போய் விடும்.
لَمْ يَتَكَلَّمْ في المَهْدِ إلَّا ثَلاثَةٌ عِيسَى ابنُ مَرْيَمَ، وصاحِبُ جُرَيْجٍ، وكانَ جُرَيْجٌ رَجُلًا عابِدًا، فاتَّخَذَ صَوْمعةً، فَكانَ فيها، فأتَتْهُ أُمُّهُ وهو يُصَلِّي، فقالَتْ: يا جُرَيْجُ فقالَ: يا رَبِّ أُمِّي وصَلاتِي، فأقْبَلَ علَى صَلاتِهِ، فانْصَرَفَتْ، فَلَمَّا كانَ مِنَ الغَدِ أتَتْهُ وهو يُصَلِّي، فقالَتْ: يا جُرَيْجُ فقالَ: يا رَبِّ أُمِّي وصَلاتِي، فأقْبَلَ علَى صَلاتِهِ، فانْصَرَفَتْ، فَلَمَّا كانَ مِنَ الغَدِ أتَتْهُ وهو يُصَلِّي فقالَتْ: يا جُرَيْجُ فقالَ: أيْ رَبِّ أُمِّي وصَلاتِي، فأقْبَلَ علَى صَلاتِهِ، فقالَتْ: اللَّهُمَّ لا تُمِتْهُ حتَّى يَنْظُرَ إلى وُجُوهِ المُومِساتِ، فَتَذاكَرَ بَنُو إسْرائِيلَ جُرَيْجًا وعِبادَتَهُ وكانَتِ امْرَأَةٌ بَغِيٌّ يُتَمَثَّلُ بحُسْنِها، فقالَتْ: إنْ شِئْتُمْ لأَفْتِنَنَّهُ لَكُمْ، قالَ: فَتَعَرَّضَتْ له، فَلَمْ يَلْتَفِتْ إلَيْها، فأتَتْ راعِيًا كانَ يَأْوِي إلى صَوْمعتِهِ، فأمْكَنَتْهُ مِن نَفْسِها، فَوَقَعَ عليها فَحَمَلَتْ، فَلَمَّا ولَدَتْ قالَتْ: هو مِن جُرَيْجٍ، فأتَوْهُ فاسْتَنْزَلُوهُ وهَدَمُوا صَوْمعتَهُ وجَعَلُوا يَضْرِبُونَهُ فقالَ: ما شَأْنُكُمْ؟ قالوا: زَنَيْتَ بهذِه البَغِيِّ، فَوَلَدَتْ مِنْكَ، فقالَ: أيْنَ الصَّبِيُّ؟ فَجاؤُوا به، فقالَ: دَعُونِي حتَّى أُصَلِّيَ، فَصَلَّى، فَلَمَّا انْصَرَفَ أتَى الصَّبِيَّ فَطَعَنَ في بَطْنِهِ، وقالَ: يا غُلامُ مَن أبُوكَ؟ قالَ: فُلانٌ الرَّاعِي، قالَ: فأقْبَلُوا علَى جُرَيْجٍ يُقَبِّلُونَهُ ويَتَمَسَّحُونَ به، وقالوا: نَبْنِي لكَ صَوْمعتَكَ مِن ذَهَبٍ، قالَ: لا، أعِيدُوها مِن طِينٍ كما كانَتْ، فَفَعَلُوا، وبيْنا صَبِيٌّ يَرْضَعُ مِن أُمِّهِ، فَمَرَّ رَجُلٌ راكِبٌ علَى دابَّةٍ فارِهَةٍ، وشارَةٍ حَسَنَةٍ، فقالَتْ أُمُّهُ: اللَّهُمَّ اجْعَلِ ابْنِي مِثْلَ هذا، فَتَرَكَ الثَّدْيَ وأَقْبَلَ إلَيْهِ، فَنَظَرَ إلَيْهِ، فقالَ: اللَّهُمَّ لا تَجْعَلْنِي مِثْلَهُ، ثُمَّ أقْبَلَ علَى ثَدْيِهِ فَجَعَلَ يَرْتَضِعُ. قالَ: فَكَأَنِّي أنْظُرُ إلى رَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ وهو يَحْكِي ارْتِضاعَهُ بإصْبَعِهِ السَّبَّابَةِ في فَمِهِ، فَجَعَلَ يَمُصُّها. قالَ: ومَرُّوا بجارِيَةٍ وهُمْ يَضْرِبُونَها ويقولونَ: زَنَيْتِ، سَرَقْتِ، وهي تَقُولُ: حَسْبِيَ اللَّهُ ونِعْمَ الوَكِيلُ، فقالَتْ أُمُّهُ: اللَّهُمَّ لا تَجْعَلِ ابْنِي مِثْلَها، فَتَرَكَ الرَّضاعَ ونَظَرَ إلَيْها، فقالَ: اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَها، فَهُناكَ تَراجَعا الحَدِيثَ، فقالَتْ: حَلْقَى مَرَّ رَجُلٌ حَسَنُ الهَيْئَةِ فَقُلتُ: اللَّهُمَّ اجْعَلِ ابْنِي مِثْلَهُ، فَقُلْتَ: اللَّهُمَّ لا تَجْعَلْنِي مِثْلَهُ، ومَرُّوا بهذِه الأمَةِ وهُمْ يَضْرِبُونَها ويقولونَ زَنَيْتِ، سَرَقْتِ، فَقُلتُ: اللَّهُمَّ لا تَجْعَلِ ابْنِي مِثْلَها فَقُلْتَ: اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَها. قالَ: إنَّ ذاكَ الرَّجُلَ كانَ جَبَّارًا، فَقُلتُ: اللَّهُمَّ لا تَجْعَلْنِي مِثْلَهُ، وإنَّ هذِه يقولونَ لها زَنَيْتِ ولَمْ تَزْنِ، وسَرَقْتِ ولَمْ تَسْرِقْ فَقُلتُ: اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَها.
தொட்டிலில் மூன்று குழந்தைகள் பேசினார்கள். அதில் ஜுரைஜிக்காக சாட்சி கூறிய குழந்தையும் ஒன்று. ஜுரைஜ் மிகப்பெரிய வணக்கசாலியாக இருந்தார். தனக்கென்று ஒரு வணக்கஸ்தளத்தை உருவாக்கி அதில் இருந்தார். ஒரு நாள் ஜுரைஜ் தொழுது கொண்டிருக்கும்போது அவரது தாயார் அழைத்தார். ஜுரைஜ் 'இறைவனே! எனது தாயா? எனது தொழுகையா? என்று எண்ணிவிட்டுத் தொழுகையைத் தேர்ந்தெடுத்தார். இரண்டாவதாக அழைத்த போது பதிலளிக்காமல் தொழுது கொண்டிருந்தார். மூன்றாவதாக அழைத்தபோது அவர் பதிலளிக்காதலால் அவரது தாய் அவர் மீது கோபமாக ''விபச்சாரியின் முகத்தைப் பார்க்காத வரை அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்யாதிருக்கட்டும் '' என்று சாபமிட்டு விட்டார்.
சில காலங்களுகளுக்கு பின் ஒரு பெண், ஆட்டிடையன் ஒருவனுடன் விபச்சாரம் செய்து கர்ப்பமடைந்தாள் . தனது தவறு வெளியாகி விடுமென்று அவள் அஞ்சியபோது அந்த ஆட்டிடையன் அவளிடம் ''உன்னிடம் எவரேனும் குழந்தைக்குத் தந்தை யாரென்று கேட்டால், வணக்கசாலியான ஜுரைஜ் என்று கூறிவிடு '' என்றான். அவளும் அவ்வாறே கூறிவிட்டாள். இதையறிந்த மக்கள் ஜுரைஜின் வணக்கஸ்த்தலத்தை உடைத்தெறிந்தனர். அதிகாரிகள் அவரைக் கைது செய்து செய்து தண்டனை நிறைவேற்றப்படும் மைதானத்திற்கு இழுத்து வந்தனர். வரும் வழியில் தனது தாயின் துஆ நினைவுக்கு வந்து அவர் சிரித்தார் தண்டனைக்காகத் தயாரானதுபோது இரண்டு ரக்அதுக்கள் தொழ அனுமதி கேட்டார்.
பின்பு அந்தக் குழந்தையை வாங்கி காதின் அருகில் மெதுவாக ''உன் தந்தை யார்? என்று கேட்டார். குழந்தை ''எனது தந்தை இன்ன ஆட்டிடையன்'' என்று கூறியது. உடனே கூடியிருந்த மக்கள் தக்பீர் தஹ்ளீல் கூறி ''நாங்கள் உங்களது வணக்கஸ்த்தலத்தை தங்கத்தாலும் வெள்ளியாலும் கட்டித் தருகிறோம்'' என்றார்கள். அவர் ''வேண்டாம் முன் போலவே மண்ணால் அமைத்துக்கொடுங்கள் என்று கூறிவிட்டார்.(முஸ்லிம் ; 2550]
لو كان جريج الراهب فقيها عالما ، لعلم أن إجابة أمه أفضل من عبادة ربه
நபி [ஸல்] அவர்கள் ''ஜுரைஜ் மார்க்கத்தை விளங்கியவராக இருந்திருந்தால் தொழுகையை நீண்ட நேரம் தொடர்வதைவிட தாய்க்கு பதிலளிப்பது அவசியம் என்பதை அறிந்திருப்பார்'' என்றார்கள் . (அல்ஜாமிவுஸ்ஸகீர் 7453)
இதனால்தான் அறிஞர்கள் கூறுகிறார்கள்.. ஒருவர் நஃபிலான [உபரியாக] தொழும்போது பெற்றோர்களில் ஒருவர் அழைத்தால் தொழுகையை முறித்துவிட்டு அழைப்பை ஏற்கவேண்டும்.
ஒருவர் எத்தனை பெரிய வணக்கசாலியாக இருந்தாலும் இபாதத்தில் மூழ்கித் திழைத்தவராக இருந்தாலும் மார்க்கம் இல்லையென்றால் அவரும் சில நேரங்களில் கைசேதப்படும் நிலை ஏற்படும் என்பதற்கு ஜுரைஜின் வரலாறு அழகான உதாரணம்.
மார்க்க கல்வி தான் ஒரு மனிதனுக்கு எல்லாவற்றையும் கொடுக்கிறது. உலகத்தில் ஒருவனுக்கு எல்லாம் இருந்து மார்க்கம் இல்லையென்றால் அவன் எதுவும் இல்லாதவனைப் போல.ஒருவன் எதுவும் இல்லாமல் மார்க்கம் மட்டும் இருந்தால் அவன் உலகம் அனைத்தையும் பெற்றுக் கொண்டவனைப் போல என்பது குர்ஆனும் ஹதீஸும் நமக்கு போதிக்கிற உண்மை.
قال علي رضي ليس اليتيم الذي لا والد له انما اليتيم الذي لا علم له ولا ادب له
தந்தையில்லாத குழந்தை அநாதையல்ல. யாரிடம் மார்க்க கல்வியும் ஒழுக்கமும் இல்லையோ அவன் தான் அநாதை என அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
நம் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று சிந்திக்க கடமைப் பட்டிருக்கிறோம். ஆதரவுள்ள பிள்ளைகளாக அவர்களை நாம் உருவாக்கியிருக்கிறோமா இல்லை ஆதரவற்றவர்களாக நாதியற்றவர்களாக விடப்போகிறோமா என்று சிந்திக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.
உலகில் அல்லாஹ் எல்லா மனிதர்களுக்கும் அவரவர்களுக்குத் தகுதியான பாக்கியங்களை வழங்கியிருக்கிறான். சிலருக்கு குழந்தைச் செல்வம் பெரியதாக இருக்கிறது, சிலருக்கு பொருட்ச் செல்வம் பெரியதாக இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வின் பார்வையில் மிகச் சிறந்த நிஃமத் என்பது எது என்றால்...?
திருக்குர்ஆனின் அத்தியாங்களில் சூரத்துல் ளுஹா என்ற 93-வது அத்தியாயத்தில் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று நிஃமத்துகளை சொல்லி அதற்கு எப்படி நன்றி செலுத்த வேண்டும் என்பதையும் பின்வரும் மூன்று ஆயத்தின் மூலமாக தெரிவிக்கின்றான்.
முதலாவது நிஃமத் ;
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
இதற்கு எப்படி நன்றி செலுத்த வேண்டுமென்பதை
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர். (அல்குர்ஆன் : 93 ; 9) என்ற வசனத்தில் கூறுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
أبو هريرة رضي الله عنه أن رجلاً شكا إلى النبي صلى الله عليه وسلم قسوة قلبه فقال: "إن أردت أن يلين قلبك فأطعم المساكين وامسح رأس اليتيم
இரக்கமற்ற உள்ளமுடைய ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தன் உள்ளத்தைப் பற்றி முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரிடம் உள்ளம் இரக்கம் கொண்டதாக மாற ஏழைகளுக்கு உணவளிக்குமாறும் அநாதைக் குழந்தைகளின் தலையை தடவுமாறும் ஏவினார்கள்.
இரண்டாவது நிஃமத் ;
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
அல்லாஹ் கொடுத்த செல்வத்திற்கு நாம் எப்படி நன்றி செலுத்த வேண்டும் என்பதை
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
“யாசிப்போரை விரட்டாதீர்” என்ற வசனத்தின் வழியே உணர்த்துகிறான்.
மூன்றாவது நிஃமத் ;
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ
இன்னும், நபித்துவத்தின் ஞானம் இல்லாமல் இருந்த உங்களுக்கு நபித்துவத்தை வழங்கி அதன் ஞானத்தை அவன் அறிவித்தான்.(அல்குர்ஆன் : 93 ;7)
நபிப் பட்டம் பெறுவதற்கு முன்னால் நபியவர்களுக்கு நுபுவ்வத்தின் ஞானம் இல்லாமலிருந்தது. நபித்துவம் பெற்றதற்கு பிறகு ஞானம் கிடைத்தது. இதற்கு எப்படி நன்றி செலுத்த வேண்டும் என்பதை ;
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக (அல்குர்ஆன் : 93 ; 11) என்ற வசனத்தின் வழியே உணர்த்துகிறான்.
அல்லாஹ் ஒரு மனிதனுக்கு கல்வி அறிவை கொடுத்தான். கல்வியறிவு கொடுப்பட்ட அவன் அதற்கு எப்படி நன்றி செலுத்த வேண்டும் என்றால், அந்த கல்வி ஞானத்தைத் தேடி வருபவர்களுக்கு அதை கற்றுக் கொடுக்க வேண்டும். மூடி மறைக்க கூடாது.
இதில் முதல் இரண்டு நிஃமத்துகளை அல்லாஹ் கூறிப்பிடும் போது, அதை நிஃமத் என்று குறிப்பிடவில்லை.ஆனால் நபித்துவத்தின் ஞானத்தைப் பற்றி கூறும் போது அல்லாஹ் அதை நிஃமத் என்பதாக குறிப்பிடுகிறான்.எனவே கல்வி ஞானம் வழங்கப்படுவதைத்தான் அல்லாஹ் நிஃமத்தாக கருதுகிறான் என்பது புரிகிறது.
இதோ வரலாற்றில் ஒரு அற்புதமான நிகழ்வு.
கல்வி என்றைக்கும் பணம்,பதவிக்கு முன் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுத்ததில்லை
قدم هارون الرّشيد المدينة، وكان قد بلغه أن مالك بن أنس عنده «الموطأ» يقرؤه على النّاس، فوجّه إليه البرمكيّ فقال: أقرئه السلام وقل له: يحمل إليّ الكتاب ويقرؤه عليّ، فأتاه البرمكيّ فقال: أقرئه السلام، وقل له: إن العلم يؤتى ولا يأتي، فأتاه البرمكيّ فأخبره، وكان عنده أبو يوسف القاضي، فقال: يا أمير المؤمنين، يبلغ أهل العراق أنك وجّهت إلى مالك في أمر فخالفك، اعزم عليه، فبينما هو كذلك، إذ دخل مالك، فسلّم وجلس، فقال له الرّشيد: يا ابن أبي عامر أبعث إليك وتخالفني؟ فقال: يا أمير المؤمنين، أخبرني الزّهري، عن خارجة بن زيد، عن أبيه قال: كنت أكتب الوحي بين يدي رسول الله- صلى الله عليه وسلّم- لا يَسْتَوِي الْقاعِدُونَ من الْمُؤْمِنِينَ 4: 95 [النساء: 95] وابن أمّ مكتوم عند النّبيّ- صلّى الله عليه وسلّم- فقال: يا رسول الله انى رجل ضرير، وقد انزل الله عليك فى فضل الجهاد ما قد علمت، فقال النبي صلى الله عليه وآله وسلم: «لا ادرى» وقلمي رطب ما جف، ثم وقع فخذ النبي صلى الله عليه وآله وسلم على فخذي، ثم أغمي على النبي صلى الله عليه وآله وسلم ثم جلس النبي صلى الله عليه وآله وسلم فقال يا زيد اكتب غَيْرُ أُولِي الضَّرَرِ 4: 95 [النساء:
95] .
ويا أمير المؤمنين حرف واحد بعث فيه جبريل والملائكة- عليهم السلام- من مسيرة خمسين ألف عام، ألا ينبغي لي أن أعزّه وأجلّه، وإن الله تعالى رفعك وجعلك في هذا الموضع بعملك، فلا تكن أنت أول من يضيع عزّ العلم فيضيع الله عزّك، فقام الرّشيد يمشي مع مالك إلى منزله ليسمع منه «الموطأ
.இமாம் மாலிக் ரஹ் அவர்கள் உலமாக்களின் முன்னோடி. 92 ஆண்டு கால பரிசுத்தமான வாழ்வுக்கு சொந்தக்காரர்.ஹஜ் உம்ராவை தவிர வேறு எதற்கும் மதீனாவை விட்டு வெளியே போகாதவர் என்பது ஆச்சரியமல்ல,92 ஆண்டில் ஒருநாள் கூட மரியாதை கருதி மதீனா பூமியில் வாகனித்ததில்லை.மதீனா மண்ணை மதித்ததற்காகவே மிதித்துநடந்தார். ரவ்லாவில் 70 ஆண்டுகள் தீன்கல்வி போதித்தவர்.14 இஸ்லாமிய கலீபாக்கள் காலத்தில் வாழ்ந்த மாமேதை. குறிப்பாக மாமன்னர் ஹாரூன் ரஷீத் காலத்தில் வாழ்கிறார்.
ஒரு தடவை மன்னர் ஹாரூன் ரஷீத் மதீனா வருகிறார்.வந்த இடத்தில் இமாம் மாலிக் ரஹ் அவர்கள் முஅத்தா எனும் ஒரு அற்புதமான ஹதீஸ்நூல் ஒன்றை தொகுத்து,அதை அவர்களே மக்களுக்கு பாடம் நடத்துகிறார்கள் எனவும் கேள்விப்பட்டார்கள்.தன் பணியாள் பர்முகியை அனுப்பி, இமாம் அவர்களுக்கு ஸலாம் கூறி- தாங்கள் இராக் வந்து அரசருக்கு அந்த ஹதீஸ் நூலை கற்றுத்தரவேண்டும் என்பது அரசரின் வேண்டுகோள் என்று சொல்லியனுப்பினார்கள். அதற்கு இமாம் மாலிக் ரஹ் அவர்கள், மன்னருக்கு என் ஸலாமை சொல்லுங்கள். மேலும் கல்வியை நீங்கள் தேடி வரவேண்டும்.அது உங்களை தேடி வராது என்பதையும் தெரிவித்துவிடுங்கள் என்று தைரியமாக சொல்லி அனுப்பினார்கள். அப்போது அந்த சபையில் இருந்த அபூயூஸுப் காழி அவர்கள் மன்னர் அவர்களே! இமாம் மாலிகிடம் நீங்கள் வேண்டியதையும்,இமாம் அவர்கள் உங்களுக்கு அனுப்பிய பதிலையும் இராக்வாசிகள் கேள்விப்பட்டால் சரியாக இருக்காது.எனவே உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னபோது- அச்சபைக்கு இமாம் மாலிக் ரஹ் அவர்கள் வருகை தருகிறார்கள். அப்போது இமாம் அவர்களை நோக்கி மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள், என் உத்தரவுக்கு நீங்கள் ஏன் மாறு செய்தீர்?என வினவியபோது மாலிக் ரஹ் கூறினார்கள் ; நபித்தோழர் ஜைத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ;
நான் நபி ஸல் அவர்களிடம் வஹி எழுதிக்கொண்டிருந்தேன்.அப்போது
لا يَسْتَوِي الْقاعِدُونَ من الْمُؤْمِنِين
َ(இந்த தீனுக்காக போரில் கலந்துகொள்பவர்களும் கலந்துகொள்ளாதவர்களும் நன்மையில் சமமாகிவிடமாட்டார்கள்) எனும் வசனம் இறங்கியது.அந்நேரம் பார்வை தெரியாத ஸஹாபியான இப்னு உம்முமக்தூம் ரலி அங்கிருந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் பார்வை தெரியாதவன்.என் போன்றோரின் நிலை என்ன என வினவினார்.
அதற்கு பூமான் நபி ஸல் அவர்கள் பணிவாக அதுபற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை இறைச்செய்தியை என் பேனா எழுதி முடித்துவிட்டது என்று கூறினார்கள். சிரிதுநேரத்தில் நபி ஸல் அவர்கள் மயக்கநிலைக்கு சென்றுவிட்டார்கள்.அதாவது வஹி வருகிறது.என்னை அழைத்து
غَيْرُ أُولِي الضَّرَرِ 4: 95 [النساء
(நோயாளிகளை தவிர)என்ற ஒரு எழுத்தை அதில் சேர்த்து எழுதச்சொன்னார்கள்
அமீருல் முஃமினீன் அவர்களே! ஒரு எழுத்துக்காக அதன் கண்ணியம் கருதி ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை,மற்றும் பல வானவர்களையும் 500 ஆண்டின் தொலைவிலிருந்து அல்லாஹ் அனுப்பி வைத்தான். அப்படிப்பட்ட அல்லாஹ்வின் கல்விக்கு நான் மரியாதை செய்யவேண்டாமா? அல்லாஹ் உங்களின் உயர்வான செயலால் உங்களை இந்நிலையில் வைத்துள்ளான்.கல்வியின் கண்ணியத்தை கெடுத்தால் அல்லாஹ் உங்களின் கண்ணியத்தை கெடுத்து இந்த இடத்தைவிட்டும் இறக்கிவிடுவான் என்றார்கள்.அதைக்கேட்ட இமாம் அவர்களின் இல்லம் தேடிவந்து முஅத்தா எனும் ஹதீஸ் நூலை மாமன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் கற்றதாக வரலாறு.
கடந்து செல்லும் மேகத்தை பார்த்து, நீ எங்கு மழையை சுமந்துகொண்டு கொட்டினாலும் அது என் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகவே இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு விசாலமான ஆட்சியை பெற்ற மன்னர் ஹாரூன் ரஷீத் அத்தகைய ஆட்சியை பெற கல்வியின் மீது அவருக்கு இருந்த மரியாதயே காரணம்.
قال الخليفة الأموي عبدالملك بن مروان يوصي بنيه :
يَا بَنِيَّ تعلّموا العلم فإن كُنتم سادة فُقتُم،
وَإِن كُنْتُم وَسَطًا سُدْتُمْ،
وَإِنْ كُنْتُمْ سُوقَةً عِشْتُمْ .
உமய்யா ஆட்சியாளர் அப்துல் மலிக் பின் மர்வான் தன் மகனுக்கு அறிவுரை கூறினார்: "மகனே! கல்வி கற்றுக் கொள், நீங்கள் தலைவர்களாயிருந்தால் உயர்வடைவீர்கள், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தால் தலைவர்களாவீர்கள், குடிமக்களாக இருந்தால் பிழைத்துக் கொள்வீர்கள்."