மனித நேயத்தை மாண்புடன் கடைப்பிடிப்போம் 18-08-22
- Get link
- X
- Other Apps
மனித நேயத்தை மாண்புடன் கடைப்பிடிப்போம்!!!
ஐ.நா.பொது சபை, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ம் நாளான இன்று உலக மனித நேய தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது.
ஏற்கனவே ஜுன் 21 ம் தேதி சர்வதேச மனித நேய தினமாக அனுஷ்டிக்கப்படும் போது மீண்டும் இன்னொரு தேதியில் அதே பெயரில் ஒரு தினம் கொண்டாடப்படுகிறது என்றால் மனித நேயம் குறித்த சிந்தனையும் விழிப்புணர்வும் மக்களை இன்னும் சென்றடைய வில்லை என்பது புலப்படுகிறது.
மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஓர் உணர்வாகும்.
தமிழில் மனிதநேயத்தை மனிதபிமானம், மனிதத்துவம் என்றும் குறிப்பிடுவர்.
மனிதம் இருக்கிறதா ? நேயம் என்றால் என்ன ?” போன்ற கேள்விகளுக்கு இடையில் உலகம் ஜீவித்துக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
அரசியல் லாபங்கள், அதிகார ஆசை, மத இன உணர்வுகளின் தீவிரச் செயல்பாடுகள், காழ்ப்புணர்ச்சி, சுயநலம் போன்ற காரணங்களால், மனித வாழ்வு ரணமாக ஆகியிருக்கிறது.
தனிமனித நிம்மதியும், பொது அமைதியும் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் இச்சூழலில், ”உலக மனித நேய தினம்” என்பதன் வாயிலாக நாம் மனிதத்துவத்தின் மாண்புகளை நாம் அறிந்து கொள்வோம்.
இஸ்லாத்தில் மனிதநேயம் என்பது உயர்வானதாகவும், மேலும் மற்ற கோட்பாடுகளை விடவும் வித்தியாசமானதாகவும் போற்றப்படுகிறது.
ஒரு மனிதனை வாழவைப்பதும், அவனது வாழ்க்கைக்கு முடிந்தளவுக்கு உதவி புரிவதும், அவனுக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து அவனை விடுவிப்பதும் தான் மனித நேயத்தின் உயர் கோட்பாடுகளாக மதிக்கப்படுகின்றன.
மனிதன் என்பதைக் குறிக்கும் இன்ஸான் எனும் வார்த்தை 63 முறையும், மனிதர்கள் என்பதைக் குறிக்கும் நாஸ் எனும் வார்த்தை 240 முறையும், அனைவரையும் உள்ளடக்கிய பனீ ஆதம் (ஆதமுடைய மக்கள்) எனும் வார்த்தை 6 முறையும் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.
இதற்கெல்லாம் மேலாக மாநபி ஸல் அவர்களுக்கு முதலில் இறக்கியருளப்பட்ட முதல் 5 வசனங்களில் 2 முறை இன்ஸான் எனும் வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது.
எனவே, மனிதர்களிடம் இடம் பெற வேண்டிய பண்புகளில் பிரதானமானது இன்ஸானிய்யத் எனும் மனிதத்துவம் தான் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.
இன்னும் சொல்லப்போனால் குர்ஆன், ஒன்று மனிதர்களிடம் பேசுகிறது. அல்லது மனிதர்களுக்காகப் பேசுகிறது. ஆகவே குர்ஆனை கிதாபுல் இன்ஸான் மனிதர்களுக்கான வேதம் என்று கூட சொல்லலாம்.
அந்த அளவுக்கு மனிதத்துவம் குறித்து இஸ்லாம் பேசுகிறது.
مَنْ قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا ؕ وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ؕ
ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால், அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ (திருக்குர்ஆன் 5:32)
عن عبد الله بن عمرو رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم
الرَّاحِمونَ يرحَمُهم الرَّحمنُ تبارَك وتعالى؛ ارحَموا مَن في الأرضِ يرحَمْكم مَن في السَّماءِ.
‘கருணையாளர்களின் மீது இறைவன் கருணை செலுத்துகின்றான். எனவே, நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானில் உள்ளவர்கள் உங்கள் மீது கருணை காட்டுவார்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அமர் (ரலி), நூல்: அபூதாவூத், திர்மிதி)
حَدَّثَنَا مُحَمَّدٌ ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ وَأَبِي ظَبْيَانَ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ
‘மக்கள் மீது கருணை காட்டாதவன் மீது, அவன் மீது இறைவன் கருணை காட்டமாட்டான்’ என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
‘எவரொருவர் தமது சகோதரருக்கு ஏற்படும் உலக துன்பங்களிலிருந்து அவரை விடுவிக்கிறாரோ, அவரை இறைவன் அவருக்கு ஏற்படப்போகும் மறுஉலக துன்பங்களிலிருந்து விடுவிக்கின்றான்; மேலும், தமது சகோதரருக்கு உதவிபுரியும் காலமெல்லாம், அவருக்கு இறைவன் உதவி புரிந்து கொண்டேயிருப்பான் என நபி (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா, நூல் – அஹ்மது).
மனித நேய மாண்பாளருக்கான இறைவனின் இரண்டு சோபனங்கள்.
روى البخاري ومسلم في صحيحيهما من حديث أبي هريرة رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم قال: «بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ، فَأَخَذَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ»
“ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையை விட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்”. என இறைத்தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
மனித நேயத்தின் முதல் படி...
இன்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாக காரணமாக அமைந்திருப்பது பிறப்பால், நிறத்தால், இனத்தால், மொழியால் மனிதனை பிரித்துப் பார்க்கும் ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் தான்.
ஆனால், இஸ்லாம் சக மனிதனை எப்படி பார்க்க வேண்டும் என்ற இலக்கணத்தை வகுத்து தந்துள்ளது.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் மனித நேயத்துடன் நடந்து கொள்வதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு வித நேசம்,, நெருக்கம் உண்டாகும்.
இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.
மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை தூண்டி விடுகிறது.
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். ( அல்குர்ஆன் 49:13 )
பிலால் ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட துவக்கத்தில் மாநபி ஸல் அவர்களின் கட்டளையின் படி தமது இஸ்லாத்தை மறைத்தே வைத்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் பிலால் ரலி அவர்களின் ஈமானிய நிலை பிலால் ரலி அவர்களின் எஜமானன் உமைய்யாவிற்கு தெரிய வரவே அன்றிலிருந்து பிலால் ரலி அவர்களை துன்புறுத்த ஆரம்பித்தான் உமைய்யா.
மாநபி ஸல் அவர்களின் கவனத்திற்கு இந்த செய்தி வந்த போது மாநபி ஸல் அவர்கள் மிகவும் வருந்தினார்கள். ஒரு முறை அபூபக்ர் ரலி அவர்களிடம் " நம்மிடம் பொருளாதாரம் இருந்தால் பிலாலை அடிமைத்தனத்தில் இருந்து விலை கொடுத்து வாங்கி விடுவித்து விடலாமே" என்று தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்த வார்த்தை அபூபக்ர் ரலி அவர்களை உறங்க விட வில்லை.
ஒரு நாள் பிலால் ரலி அவர்களை உமைய்யா ரமளா எனும் இடத்தில் வைத்து சித்ரவதை செய்து கொண்டிருந்ததைப் பார்த்த அபூபக்ர் ரலி அவர்கள் உமைய்யாவிடம் " ஒரு ஏழையை, ஒன்றுமில்லாத ஒருவரை இப்படியா சித்ரவதை செய்வாய்? என்று கேட்டார்கள்.
அவ்வளவு இரக்கம் இருந்தால் நீர் வேண்டுமானால் அவரை இந்த நிலையில் இருந்து காத்திட வேண்டியது தானே அபூபக்ர்? என்று ஏளனத்துடன் உமைய்யா கேட்டான்.
இந்த ஒரு தருணத்திற்காகத் தான் காத்திருந்தது போல அவரின் எஜமானிடம் பிலால்(ரலி)அவர்களை விலைக்கு கேட்கிறார்கள். 10 தங்க காசுகளுக்கு பிலால் (ரலி) அவர்களை அபூபக்கர் (ரலி) அவர்களிடம் உமைய்யா விற்று விட்டு எக்காளத்தில் கூறினான் "இவரை நீர் ஒரு தங்கக் காசுக்கு கேட்டிருந்தாலும் நான் விற்றிருப்பேன் எனக் கூறுகிறான். பிலால் (ரலி) அவர்களுக்காக வேண்டி நீ 100 தங்கக் காசுகள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன் என அபூபக்கர்(ரலி) அவர்கள் அவனுக்கு பதில் அளித்தார்கள். பின்னர் பிலால்(ரலி) அவர்களை அபூபக்கர் (ரலி) அவர்கள் விடுதலை செய்தார்கள்.
அடிமை என்ற ஒரே காரணத்திற்காக கருப்பு நிறத்தவர் என்பதற்காக ஒரு தங்க காசுக்கு கூட ஈடாக மதிக்க மறுத்த உமைய்யாவிடம் மனித மாண்பை மனித நேயப் பண்பால் உணர்த்தினார்கள் அபூபக்ர் ரலி அவர்கள்.
(3 ஊக்கியா தங்கம் 40 ஊக்கியா தங்கம் என பல்வேறு ரிவாயத்துகள் உள்ளன.)
இன்றைக்கு பிறர் படும் துன்பங்களை வேடிக்கை பார்ப்பது, சிரிப்பது, ரசிப்பது, என காலம் மாறிக் கொண்டிருக்கிறது. ப்ராங்க் வீடியோ எனும் பெயரில் நகைச்சுவையாக பார்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அடுத்தவருக்கு ஏற்படும் சிரமங்களை தமக்கு ஏற்பட்ட சிரமங்களாக எண்ண வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.
நபிமார்கள் ஏகத்துவம், தொழுகை நோன்பு, ஜகாத் என நம்பிக்கை மற்றும் வழிபாடு தொடர்பான அம்சங்களை மாத்திரம் மக்களுக்கு காட்டிகொடுக்க வரவில்லை மாறாக! எத்தனையோ மனித நேயப் பணிகளையும் செய்து காட்டி மக்களை ஆர்வமூட்டினர்.
கிணற்றிலே தண்ணீர் எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு மூஸா (அலை) குடங்களில் தண்ணீர் நிரப்பிகொடுத்தார்கள் என அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்.
ஒடுக்கப்பட்ட (பனூ இஸ்ராயீல்) மக்களுக்காக குரல்கொடுத்த நிகழ்வுகளை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
வெண்குஷ்டம் மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு ஈஸா அலை அவர்கள் மருத்துவம் பார்த்ததாக அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
ذكره ابن بطال في "شرح صحيح البخاري" (1/87) بقوله: "روى الوليد بن مسلم، عن أبي بكر، عن ضمرة بن حبيب، قال: كان بين أبى ذر وبين بلال محاورة، فعيره أبو ذر بسواد أمه، فانطلق بلال إلى رسول الله - صلى الله عليه وسلم -، فشكي إليه تعييره بذلك، فأمره رسول الله - صلى الله عليه وسلم - أن يدعوه، فلما جاءه أبو ذر، قال له رسول الله - صلى الله عليه وسلم - : شتمت بلالاً وعيَّرته بسواد أمه؟ قال: نعم، قال رسول الله - صلى الله عليه وسلم -: تمت ما كنت أحسب أنه بقى في صدرك من كبر الجاهلية شيء، فألقى أبو ذر نفسه بالأرض، ثم وضع خده على التراب، وقال: والله لا أرفع خدي من التراب حتى يطأ بلال خدي بقدمه، فوطأ خده بقدمه".
அபூதர் ஃகிஃபாரி ரலி அவர்களும், பிலால் ரலி அவர்களும் நபிகள் நாயகத்தின் நெருங்கிய அன்பைப் பெற்றவர்கள். ஒரு சமயம். அவர்களுக்கிடையே சிறிய பிரச்சினை எழுந்தது. அபூதர் (ரலி) அவர்கள் கோபத்தால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பிலாலை நோக்கி, “கறுப்புத் தாய்க்குப் பிறந்தவனே” என்று கூறினார். அதனால் ஏற்பட்ட மனவேதனை தாங்காமல் பிலால் (ரலி) நபிகளாரிடம் சென்று முறையிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி)அவர்களை அழைத்து இதைப் பற்றி விசாரித்தார்கள்.
நபி (ஸல்): பிலாலைக் குறித்து இழிவாகப் பேசினீரா?
அபூதர் (ரலி) : ஆம்
நபி (ஸல்): அவருடைய தாயாரைக் குறை கூறினீரா?
அபூதர் (ரலி) : (மவுனமாக இருந்தார்கள்)
நபி (ஸல்): அறியாமைக் கால மடமைத்தனம் இன்னும் உம்மிடம் குடி கொண்டிருக்கிறதே" என்று கண்டிப்பான குரலில் கூறினார்கள்.
அபூதர் (ரலி) அவர்களின் முகம் வெளுத்தது. அச்சத்துடன் பெருமானாரிடம் கேட்டார்: “என்னிடம் பெருமை இருப்பதற்கான அடையாளமா இது?”
நபி (ஸல்): ஆம்.
பின்னர் நபி (ஸல்) தன்னை விட கீழானவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அபூதர் ரலி அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இந்தப் பாடத்தைப் பெற்றுக் கொண்ட அபூதர் (ரலி) பிலாலை (ரலி) நோக்கி ஓடினார். அவரது கரம் பற்றி மன்னிப்புக் கேட்டார். மன்னிப்பு கேட்டதுடன், பிலாலின் முன்னால் வந்து தன் கன்னத்தை பூமியின் (தரையின் வைத்தார். பிலாலின் பாதங்களைத் தம் கைகளால் பிடித்து இவ்வாறு கூறினார்:
உமது காலால் என் கன்னத்தை மிதியுங்கள். பிலாலே, என் ஆணவம் அடியோடு அழியட்டும்”
அபூதர் அவர்களை பிலால் வாரி அணைத்தார். உச்சி முகர்ந்து, “இறைவன் உம்மை மன்னிப்பானாக” என்று கூறினார். (நூல்: முஸ்லிம்)
மனித நேயம் என்பது பிறருக்கு உதவுவது மாத்திரம் அல்ல.
சக மனிதனை மனிதனாக அங்கீகரிப்பதும் மனித நேயம் தான்.
இன்று இங்கே தான் பெரும்பாலானவர்கள் வீழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
நம் சிறு சிறு செயலிலும், சொல்லிலும், அசைவிலும் கூட மனித நேயம் மலரச் செய்வோம் !
- Get link
- X
- Other Apps