இஸ்லாம் கூறும் வணிகம்



ஒவ்வொன்றுக்கும் ஒரு தினம் அனுசரிக்கப்பட்டு அன்று ஒரு நாள் மட்டும் அது அமுல் படுத்தப்பட்டு வருவது உலக மக்களின் வழமையாக உள்ளது.  உதாரணமாக பெற்றோர் தினத்தில் மட்டும் பெற்றோரை வாழ்த்துவதும் ஆசிரியர் தினத்தில் மட்டும் ஆசிரியரை வாழ்த்துவதும் மதிப்பதும் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த வகையில் வணிகர் தினமும் வருடா வருடம் மே 05 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு நாள் மட்டும் வனிகர் மாநாட்டை நடத்தி விட்டால் மட்டும்‌ போதுமா என்றால் இல்லவே இல்லை எப்போதும் ஒரு வணிகரான வியாபாரி எப்படி தன் வியாபாரத்தை ஷரீஅத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கோடிட்டுக் காட்டுகிறது இஸ்லாம்.

 அதனடிப்படையில் இஸ்லாம் கூறும் வியாபார ஒழுக்கங்களை நாம் இந்த தொழிளாளர் தினத்திற்கும் வணிகர் தினத்திற்கும் இடைப்பட்ட இந்நேரத்தில் அறிந்து அதன் படி செயல்பட்டு அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற முயற்சிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு சில விஷயங்களை உங்களுக்கு முன்னால் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் 

இம்மை, மறுமை வெற்றிக்கு எப்படி ஈமான் இக்லாஸ் தக்வா அவசியமோ அதற்கு நிகராக பொருளாதாரமும் அவசியம் என்கிறது இஸ்லாம்

 காரணம் மனிதன் இன்று பொருளாதாரத்திற்காக ஈமானை இழந்து பொய் பேசுகிறான் பொருளாதாரத்திற்காக இக்லாஸை இழந்து ஏமாற்றுகிறான் தக்வாவை இழந்து ஹராம் ஹலாலை பேசாமல் தான்தோன்றித்தனமாக செயல்படுகிறான்.இப்படி ஒவ்வொன்றாக இழந்து இறுதியில் வாலிபத்தையும் இழந்து கேட்பாரற்று இறந்து போகிறான் இப்படி கைசேதப்பட்டு இம்மை மறுமை இரண்டிலும் நஷ்டமடைந்து பொருளாதாரம் சேகரிப்பதை ஒரு போதும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை

இறையச்சத்தோடு அவன் பொருளாதாரத்தை தேட வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது

நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோயை அல்லாஹ் குணப்படுத்திய பிறகு அவர்கள் மீது தங்க வெட்டுக் கிளிகளை அல்லாஹ் மழை போன்று இறக்கினான். அதை கையால் பிடித்து தன் ஆடையில் நிரப்பிக் கொண்டார்கள். அப்போது அல்லாஹ் நான் எவ்வளவோ நிஃமத்துகளை வழங்கியிருந்தும் மீண்டும் இதையும் பெற வேண்டும் என்று ஏன் ஆசைக்கொள்கிறீர்கள் என்று அவர்களிடம் அல்லாஹ் கேட்டான். அப்போது அய்யூப் அலை அவர்கள் யாஅல்லாஹ் உனது ரஹ்மத்தில் இருந்து யார் நிராசையடைவார்கள் என்று கூறினார்கள்
நீ தந்தால் நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் என்றார்கள்                         
عن محمد بن المنكدر قال : نعم العون على الدين الغنى- (رواه ابن ابي الدنيا في اِصلاح المال )(
ஒருவருடைய தீன் பற்றுக்குத் துணையாக இருக்கக்கூடிய விஷயங்களில் பொருளாதாரமும் ஒன்று  சுமையாக 
பொருளாதாரத்தை தேடுவதற்காக முடிந்த வரை உழைப்பது ஒவ்வொரு மனிதனின் மீதும் கடமையாகும்.

( فَإِذَا قُضِيَتِ الصَّلاةُ فَانْتَشِرُوا فِي الأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ ) [ سورة الجمعة: 10 ]
தொழுகையை நிறைவு செய்து விட்டால் பூமியில் விரைந்து சென்று அல்லாஹூடைய அருளைத் தேடுங்கள் என்கிறது அருள் மறைக்குர்ஆன் 

பொருளாதாரத்தை தேடும் வழிகளில் வியாபாரம் முக்கியமானது
இன்றைக்கு எப்படியெல்லாமோ தந்திரங்கள் செய்து வியாபாரத்தைப் பெருக்குகிறார்கள். ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு முதியவர் ஒரு ஆப்பிள் 30 ரூபாய் என்று கூறி ஒவ்வொரு பஸ்ஸாக ஏறி, இறங்கி வியாபாரம் செய்தார். அவரிடம் மக்கள் ஐந்து ரூபாய் குறைத்து ஒரு ஆப்பிள் 25 ரூபாய்க்கு தரச் சொல்லி பலர் கேட்டும் அவர் குறைக்கவில்லை. அதனால் அவரிடம் யாரும் ஆப்பிள் வாங்கவில்லை. கொண்டு சென்ற ஆப்பிள் கூடையுடன் அப்படியே திரும்பினார். சற்று நேரம் கழித்து ஒரு இளைஞன் அதே பஸ்களில் ஏறி ஒரு ஆப்பிள் 30 ரூபாய் என்று கூறி விற்பனையை ஆரம்பிக்க, அவனிடமும் ஒரு ஆப்பிள் 25 ரூபாய்க்கு தரச் சொல்லி மக்கள் கேட்க, சரி என்று அவனும் அவர்கள் கேட்ட 25 ருபாய்க்கு விற்றான். அத்தனையும் விற்றுத் தீர்ந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலாவதாக விற்பனை செய்த முதியவரிடம் அந்த இளைஞன் எவ்வளவு திறமையாக விற்பனை செய்கிறான் நீயும் ஐந்து ருபாய் குறைத்திருந்தால் உனக்கும் வியாபாரம் நடந்திருக்குமே என்று கேட்க, அதற்கு அந்த முதியவர் சொன்னாராம். அவன் வேறு யாருமல்ல. என்னுடைய மகன் தான். நான் முதலில் பஸ்ஸில் ஏறி விலையை அதிகமாக கூறுவேன். மக்கள் வாங்க மாட்டார்கள். பிறகு அதே பஸ்ஸிஸ் அதே கூடையுடன் என் மகன் ஏறி சற்று குறைத்து விற்பனை செய்வான். அத்தனையும் விற்று விடும். இரண்டு ஆப்பிள் கூடையும் ஒன்று தான் என்று சொன்னாராம்.                               
இப்படியெல்லாம் தந்திரத்துடன் வியாபாரம் நடக்கும் சூழ்நிலையில் இஸ்லாமிய வியாபாரம் சம்பந்தமாக நாம் அறிந்து அதை நடைமுறைப்படுத்துவது நமக்கு 100 ஷஹீதுகளின் நன்மையும் நபிமார்களுக்கும் ஷூஹதாக்களுக்கும் நிகரான தரஜாவையும் பெற்றுத்தரும் உன்னத அமலாக உள்ளது இன்றைய வியாபாரம்.

காரணம் யார் குழப்பமான காலகட்டத்தில் என்னுடைய ஒரு சுன்னத்தை ஹயாத்தாக்குவார்களோ அவர்களுக்கு அல்லாஹ் 100 ஷஹீதுகளின் நன்மையை அடைவார்கள் என்பது மாநபி (ஸல்) அவர்களின் அமுத மொழியாகும்.

நேர்மையான வியாபாரி நபிமார்கள், நல்லோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.
عَنْ أَبِي سَعِيدٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التَّاجِرُ الصَّدُوقُ الْأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ (ترمذي
உண்மை நாணையம் உள்ள ஒரு வியாபாரி நாளை மறுமை நாளில் நபிமார்களுடனும் ஷூஹதாக்களோடும் உண்மையாளர்களுடனும் இருப்பார் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் 

நேர்மையாக வியாபாரம் செய்வதும் ஒரு வகை வணக்கம் என்ற படிப்பினை இதில் உள்ளது.  
வியாபாரம் செய்வது நபிமார்களின் நடைமுறையாகும். 

இவ்வுலகில் இஸ்லாம் இரண்டு காரணங்களால் மிக வேகமாக பரவத்தொடங்கியது. அதிலும் குறிப்பாக இந்திய நாட்டில் இஸ்லாம் பரவுவதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று வலிமார்களான இறை நேசர்கள் இரண்டாவது இறையச்சம் நிறைந்த வியாபாரிகள்

وكان نوح عليه السلام كان نجارا بدليل صنع الفلك بوحي الله عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال : « كان زكريا نجاراً » (ابن ماجة) عن أنس قال : قال رسول الله صلى الله عليه و سلم : هبط آدم وحواء عريانين جميعا عليهم ورق الجنة قعد يبكي ويقول لها : يا حواء قد آذاني الحر فجاءه جبريل بقطن وأمرها أن تغزل وعلمها وأمر آدم بالحياكة وعلمه (البداية والنهاية [ الدر المنثور - السيوطي ] عن أنس مرفوعا [ أول من حاك آدم عليه السلام ] (فتح القدير وروي أنه إدريس عليه السلام كان خياطا وكان يسبح الله تعالى عند إدخال الإبرة ويحمده عند إخراجها : المحرر الوجيز وكان ابراهيم عليه السلام كان بناء وقد بني الكعبة  
 நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் ஆசாரியாக இருந்தார்கள். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்வின் உத்தரவுப்படி அவர்களே கப்பல் கட்டியதால் அவர்களும் ஆசாரியாக இருந்தார்கள். நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் இந்த பூமிக்கு இறக்கப்பட்டபோது ஆடையின்றி சுவனத்து இலைகளுடன் இறக்கப்பட்டார்கள். இந்த பூமிக்கு வந்த பின்பு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வந்து பருத்தியில் இருந்து ஆடை நெய்யும் விதத்தைக் கற்றுத் தந்தார்கள். எனவே முதன் முதலில் நெசவுத் தொழில் செய்தவர்கள் நபி ஆதம் அலை அவர்கள் தான்.               
நபி இத்ரீஸ் அலை அவர்கள் டைலராக இருந்தார்கள். ஊசியை துணியில் உள்ளே செலுத்தி வெளியே எடுக்கும் ஒவ்வொரு தடவையிலும் தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருந்தார்கள். நபி இப்றாஹீம் அலை அவர்களை கட்டிடக் கலை நிபுணர் என்று கூறலாம். காரணம் அவர்கள் கஃபாவைக் கட்டினார்கள்.
 எல்லாவற்றுக்கும் மேலாக நமது நபி ஸல் அவர்கள் கதீஜா ரழி அவர்களுக்காக வியாபாரம் செய்த சம்பவங்கள் பிரபலமானதாகும்.   
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் முடிப்பதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது நபி அவர்களின் நேர்மையான வியாபாரம் அடிமை மைசராவுடன் ஷாம் தேசத்திற்கு வியாபாரத்திற்கு சென்று அங்கு செய்த நுற்பமான நுணுக்கமான சிறந்த  வெளிப்படை தன்மை கொண்ட நேர்மையான வியாபாரத்தை செய்ததன் விளைவு அன்னை கதீஜத்துல் குப்ரா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கரம் பிடித்தார்கள் 
          
தாவூத் அலை இரும்புக் கவச உடை தயாரித்து விற்பனை செய்தது பற்றி குர்ஆன் கூறுகிறது.
وَلَقَدْ آتَيْنَا دَاوُدَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ (10 (سبأ) وسبب ذلك أن داود عليه السلام، لما ملك بني إسرائيل لقي ملكا وداود يظنه إنسانا، وداود متنكر خرج يسأل عن نفسه وسيرته في بني إسرائيل في خفاء، فقال داود لذلك الشخص الذي تمثل له: (ما قولك في هذا الملك داود) ؟ فقال له الملك(نعم العبد لولا خلة فيه) قال داود: (وما هي) ؟ قال: (يرتزق من بيت المال ولو أكل من عمل يده لتمت فضائله).فرجع فدعا الله في أن يعلمه صنعة ويسهلها عليه، فعلمه صنعة لبوس كما قال عزوجل في سورة الانبياء (2)، فألان له الحديد فصنع الدروع، فكان يصنع الدرع فيما بين يومه وليلته يساوي ألف درهم، حتى ادخر منها كثيرا وتوسعت معيشة منزله، ويتصدق على الفقراء والمساكين، وكان ينفق ثلث المال في مصالح المسلمين، وهو أول من اتخذ الدروع وصنعها (قرطبي
  வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது நபி தாவூத் அலை அவர்கள் தமது ஆட்சியின் போது தம்மை இனம் காட்டிக் கொள்ளாமல் மாறுவேடத்தில் வெளியே வந்து தம்மைப் பற்றியும் தமது நடத்தை பற்றியும் பயணிகளிடம் விசாரிப்பது வழக்கம். அவ்வாறு அவர்கள் யாரிடம் விசாரித்தாலும் அந்த நபர் நபி தாவூது அலை அவர்களின் வழிபாடு நடத்தை, நீதி ஆகியவை தொடர்பாக பாராட்டாமல் இருந்ததில்லை. இந்நிலையில் ஒரு நாள் அல்லாஹ் வானவர் ஒருவரை மனித உருவில் அனுப்பி வைத்தான். அந்த வானவரை தாவூத் அலை அவர்களை சந்தித்தார்கள் மற்றவர்களிடம் விசாரிப்பது போன்ற அவரிடமும் தாவூது (அலை) விசாரித்தார்கள். அதற்கு அவர் தாவூத் அலை அவர்கள் மக்களிலேயே தமக்கும் தம் சமுதாயத்தாருக்கும் நல்லவர்கள் தான். இருந்தாலும் அவரிடம் ஒரே ஒரு பழக்கம் உள்ளது அது மட்டும் அவரிடம் இல்லை என்றால் அவர் முழுமை பெற்றவராகி விடுவார் என பதிலளித்தார்கள். தாவூது அலை அவர்கள் அது என்ன பழக்கம் என்று கேட்டார்கள். அதற்கு அந்த வானவர் தமக்கும் தம் குடும்பத்தாருக்குமான உணவு ஆதாரத்தை பொது நிதியிலிருந்தே அவர் பெறுகிறார் என்று பதிலளித்தார். அப்போது நபி தாவூத் அலை அவர்கள் இறைவனிடம் துஆவில் ஈடுபட்டு தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தன்னிறைவை தரும்படியான கைத்தொழில் ஒன்றை நமக்கு கற்றுத் தருமாறு துஆ கேட்டார்கள். அதனடிப்படையில் ஒரு தொழிலை அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான். நபி தாவூது (அலை) அவர்களுக்கு இரும்பை இலகுவாக்கி வைத்தான். கவச ஆடைகள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கற்றுத் தந்தான். கவச ஆடை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்ட முதலாமவர் நபி தாவூது அலை அவர்கள் தான். ஆயிரம் திர்ஹம் மதிப்புள்ள கவசஉடைகளை தினமும் தயாரிப்பார்கள் (தஃப்சீர் இப்னு கஸீர்)

வியாபாரத்தின் ஒழுங்கு முறைகள்
ஃபிக்ஹ் நூல்களில் வியாபாரம் பற்றியும் கொடுக்கல் வாங்கல் பற்றியும் கூறப்பட்ட விஷயங்கள் தான் அதிகம். குர்ஆனில் நீளமான வசனம் கடன் பற்றிய விபரங்களைப் பேசும் வசனம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவர் சிறந்த முஃமின் என்பதற்கான அடையாளமே அவர் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எந்த அளவுக்கு நேர்மையாக நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத் தான் என உமர் ரழி அவர்களின் கூற்று இருக்கிறது.                                                                               
உண்மை சொல்லி விற்றால் பரக்கத் இருக்கும். பொய் சொல்லி விற்பது பரக்கத்தை நீக்கும்
عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا (بخاري
விற்பவரும், வாங்குபவரும் அந்த இடத்தை விட்டும் பிரியாத வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ள உரிமை உண்டு
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا أَوْ يَقُولُ أَحَدُهُمَا لِصَاحِبِهِ اخْتَرْ وَرُبَّمَا قَالَ أَوْ يَكُونُ بَيْعَ خِيَارٍ رواه البخاري (اِخترْ உறுதிப்படுத்துவதோ, முறிப்பதோ உமது விருப்பம் என்று கூறியிருந்தாலே தவிர
ஏதேனும் பொய் சொல்லி ஒரு பொருளை விற்க நினைப்பதும், தேவையில்லாமல் சத்தியம் செய்வதும் கூடாது
عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ الَّذِي لَا يُعْطِي شَيْئًا إِلَّا مَنَّهُ وَالْمُسْبِلُ إِزَارَهُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْكَذِبِ رواه النسائ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا أَقَامَ سِلْعَةً وَهُوَ فِي السُّوقِ فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أَعْطَى بِهَا مَا لَمْ يُعْطِ لِيُوقِعَ فِيهَا رَجُلًا مِنْ الْمُسْلِمِينَ فَنَزَلَتْ{ إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِاللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا }[سورة آل عمران: 77]الْآيَةَ رواه البخاري2088
மூன்று சாராரை அல்லாஹ் மறுமையில் கருணை கொண்டு பார்க்க மாட்டான். அவர்களை பாவத்தை விட்டும் பரிசுத்தப்படுத்த மாட்டான். 1.எதை தர்மம் செய்தாலும் சொல்லிக் காட்டுபவர் 2.கரண்டைக் கீழ் ஆடை உடுத்துபவர் 3,பொய்ச் சத்தியம் செய்து பொருளை விற்பவர். ஒரு மனிதர் கடைவீதியில் விற்பனை செய்யும்போது சத்தியமாக வேறு யாரும் கொடுக்காத விலைக்கு நான் தருகிறேன் என சத்தியம் செய்தார். அப்போது அற்பமான காசுக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்பவர்களைக் கண்டித்து அல்லாஹ் வசனத்தை இறக்கினான்.

 பொய்ச் சத்தியமாக இல்லா விட்டாலும் அற்பமான விஷயங்களுக்காக சத்தியம் செய்யக்கூடாது

கைலா
 ரழி என்ற பெண்மணி நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் விற்பதும் வாங்குவதிலும் பின்வரும் நடைமுறையைப் பின்பற்றுகிறேன் அதாவது நான் ஒரு பொருளை வாங்க நினைத்தால் என்ன விலைக்கு வாங்க நினைக்கிறேனோ அதை விட மிகவும் குறைந்த விலைக்குக் கேட்பேன். வியாபாரி தர மறுப்பார். நான் இன்னும் சற்று அதிகப் படுத்திக் கேட்பேன். அப்போதும் மறுப்பார் கடைசியில் நான் மனதில் நினைத்த விலையை கடைசியாக கேட்பேன்.அவர் தந்தால் வாங்குவேன் அதேபோல் அதாவது நான் ஒரு பொருளை விற்க நினைத்தால் என்ன விலைக்கு விற்க நினைக்கிறேனோ அதை விட மிகவும் அதிக விலையைச் சொல்லுவேன். வாங்குபவர் அந்த விலைக்கு வாங்க மறுப்பார். பிறகு நான் இன்னும் சற்று குறைப்பேன் அப்போதும் மறுப்பார் கடைசியில் நான் மனதில் நினைத்த விலையைக் கூறுவேன் அந்த விலைக்கே அவருக்கு விற்பேன் இவ்வாறு செய்வது கூடுமா என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம். ஒரு பொருளை வாங்க நினைத்தால் என்ன விலைக்கு நீ வாங்க நினைக்கிறாயோ அதையே முதலாவதாக கேள். அது உனக்கு அந்த விலைக்கு கிடைத்தாலும் சரி. கிடைக்கா விட்டாலும் சரி. அதேபோல ஒரு பொருளை விற்க நினைத்தால் என்ன விலைக்கு நீ விற்க நினைக்கிறாயோ அதையே முதலில் கூறு. வாங்குபவர் அதை வாங்கினாலும் சரி. வாங்கா விட்டாலும் சரி.                           
தடுக்கப்பட்ட வியாபாரங்களில் சில...
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي فَأَخْرَجَانِي إِلَى أَرْضٍ مُقَدَّسَةٍ فَانْطَلَقْنَا حَتَّى أَتَيْنَا عَلَى نَهَرٍ مِنْ دَمٍ فِيهِ رَجُلٌ قَائِمٌ وَعَلَى وَسَطِ النَّهَرِ رَجُلٌ بَيْنَ يَدَيْهِ حِجَارَةٌ فَأَقْبَلَ الرَّجُلُ الَّذِي فِي النَّهَرِ فَإِذَا أَرَادَ الرَّجُلُ أَنْ يَخْرُجَ رَمَى الرَّجُلُ بِحَجَرٍ فِي فِيهِ فَرَدَّهُ حَيْثُ كَانَ فَجَعَلَ كُلَّمَا جَاءَ لِيَخْرُجَ رَمَى فِي فِيهِ بِحَجَرٍ فَيَرْجِعُ كَمَا كَانَ فَقُلْتُ مَا هَذَا فَقَالَ الَّذِي رَأَيْتَهُ فِي النَّهَرِ آكِلُ الرِّبَا رواه البخاري2085   
வியாபார ஒப்பந்தம் முடிந்தாலும் பொருள் கைக்கு வரும் முன் அதை அடுத்தவருக்கு விற்பது கூடாது
 عن ابْن عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ (بخاري2133) 
உருவப்படங்களை வரையும் தொழிலும், சிலைகளை விற்பதும், மதுவை விற்பதும், இசைக்கருவிகளை விற்பதும் கூடாது 
இறந்த பிராணிகளை விற்பது கூடாது
பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படும்போதே குறைந்த ஆயுளுடன் தான் வளர்க்கப்படுகின்றன. கறிக்கடைகளுக்கு லாரியில் வந்து இறங்கும் முன்பே அவற்றில் சில கோழிகள் இறந்து விடுகின்றன. ஆனால் அவற்றை குறைந்த விலைக்கு வாங்கி அதையும் விற்பதாக கேள்விப்படுகிறோம். அதை விற்பதும் கூடாது. வாங்குவதும் கூடாது.
மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை விலை ஏறட்டும் என்று பதுக்கி வைப்பது கூடாது
عَنْ عُمَرَرضي الله عنه قَال سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامًا ضَرَبَهُ اللَّهُ بِالْجُذَامِ وَالْإِفْلَاسِ (ابن ماجة)
மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை விலை ஏறட்டும் என்று பதுக்கி வைப்பவரை அல்லாஹ் வறுமையைக் கொண்டும் வெண் குஷ்டத்தைக் கொண்டும் சோதிப்பான்.
عَنْ فَرُّوخَ مَوْلَى عُثْمَانَ أَنَّ عُمَرَ رَضِ وَهُوَ يَوْمَئِذٍ أَمِيرُ الْمُؤْمِنِينَ خَرَجَ إِلَى الْمَسْجِدِ فَرَأَى طَعَامًا مَنْثُورًا فَقَالَ مَا هَذَا الطَّعَامُ فَقَالُوا طَعَامٌ جُلِبَ إِلَيْنَا قَالَ بَارَكَ اللَّهُ فِيهِ وَفِيمَنْ جَلَبَهُ قِيلَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فَإِنَّهُ قَدْ احْتُكِرَ قَالَ وَمَنْ احْتَكَرَهُ قَالُوا فَرُّوخُ مَوْلَى عُثْمَانَ وَفُلَانٌ مَوْلَى عُمَرَ فَأَرْسَلَ إِلَيْهِمَا فَدَعَاهُمَا فَقَالَ مَا حَمَلَكُمَا عَلَى احْتِكَارِ طَعَامِ الْمُسْلِمِينَ قَالَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ نَشْتَرِي بِأَمْوَالِنَا وَنَبِيعُ فَقَالَ عُمَرُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامَهُمْ ضَرَبَهُ اللَّهُ بِالْإِفْلَاسِ أَوْ بِجُذَامٍ فَقَالَ فَرُّوخُ عِنْدَ ذَلِكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أُعَاهِدُ اللَّهَ وَأُعَاهِدُكَ أَنْ لَا أَعُودَ فِي طَعَامٍ أَبَدًا وَأَمَّا مَوْلَى عُمَرَ فَقَالَ إِنَّمَا نَشْتَرِي بِأَمْوَالِنَا وَنَبِيعُ قَالَ أَبُو يَحْيَى فَلَقَدْ رَأَيْتُ مَوْلَى عُمَرَ مَجْذُومًا (مسند أحمد
உமர் ரழி கலீஃபாவாக இருக்கும்போது ஒருநாள் பள்ளிக்கு முன்பு நிறைய தானிய மூட்டைகள் இருப்பதைக் கண்டு இது என்ன என்று கேட்டார்கள் அப்போது இதுவெல்லாம் இத்தனை நாட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பின் இப்போது மீட்கப்பட்டுள்ளன என்று பதில் கூறப்பட்டது. அப்போது உமர் ரழி அவர்கள் இந்த தானியங்களில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக இதை நம்மிடம் கொண்டு வர யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக என்று கூறினார்கள். அதற்கடுத்து அதைப் பதுக்கி வைத்த இருவரைப் பற்றி தகவல் கூறப்பட்டுள்ளது. அவ்விருவரும் அடிமைகள். ஒருவர் உமர் ரழி அவர்களின் அடிமை. மற்றொருவர் உஸ்மான் ரழி அவர்களின் அடிமை. (அடிமைகள் சுயமாக வியாபாரம் செய்ய முதலாளி அனுமதி தந்தால் கூடும்.)
அவ்விருவரையும் உமர் ரழி அவர்கள் அழைத்து ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேட்க, அதற்கு அவ்விருவரும் எங்களின் பணத்தைக் கொடுத்து நாங்கள் பொருளை கொள்முதல் செய்கிறோம். அதை நாங்கள் விரும்பும்போது விற்போம். இதிலென்ன தவறு என்றனர். அவ்விருவருக்கும் உமர் ரழி அவர்கள் மேற்படி ஹதீஸைக்கூறி புத்திமதி கூற, அவ்விருவரில் உஸ்மான் ரழி அவர்களின் அடிமையான ஃபர்ரூஹ் திருந்தி நீங்கள் இவ்வாறு கூறியபின்பு இனிமேல் நான் ஒருபோதும் இவ்வாறு செய்ய மாட்டேன் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறேன் என்றார். தன்னுடைய வியாபார இடத்தையே மாற்றி விட்டார். ஆனால் மற்றொருவர் தாம் கூறிய அதே வாதத்தையே முன் வைத்தார். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஹ்யா ரஹ் கூறும்போது நான் பிற்காலத்தில் வீண் வாதம் பேசிய அந்த அடிமையை குஷ்டரோகியாக நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.   
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَالِبُ مَرْزُوقٌ وَالْمُحْتَكِرُ مَلْعُونٌ (ابن ماجة) الجالب الذي يجلب السلعة بربح يسير
மக்களின் நலன் கருதி குறைந்த இலாபத்திற்கு விற்பனை செய்யும் வியாபாரி அல்லாஹ்வின் மூலம் மறைமுகமாக ரிஜ்க் வழங்கப்படுவார். யார் பதுக்கி வைக்கிறாரோ அவர் சபிக்கப்பட்டவர்.

பொதுவாக மனிதன் வியாபாரம் செய்யும் போது மனிதனுக்கு தவக்குல் ஏற்படுகிறது. தவக்குல் முஃமின்கள் உடைய குணங்களில் உயர்ந்த குணம்.

إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

தவக்குல் உடையவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3 : 159)

தவக்குல் என்பது, அல்லாஹ்வை சார்ந்திருப்பது, அல்லாஹ்வை நோக்கி இருப்பது, அல்லாஹ்வின் மீது உள்ளத்தின் பாரத்தை சுமத்தி, உடலால் உழைப்பது.

எந்த நிலையில் இருந்தாலும், எனக்கு என்னுடைய கூலி கிடைத்து விடும் என்று அல்லாஹ்வை நம்பி இருக்க வேண்டும்.

ஒரு வியாபாரியை பொருத்தவரை, யா அல்லாஹ்! என்னுடைய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்! எனக்கு இந்த வியாபாரத்தில் பரக்கத்தை கொடு! நீ நாடினால் தான் எனக்கு இதில் லாபம் கிடைக்கும், நீ நாடவில்லை என்றால், எனக்கு நஷ்டம் ஆகிவிடும் என்று அல்லாஹ்வின் பக்கம் அவன் திரும்பியவனாகவே இருப்பான்.

கண்டிப்பாக இதுதான் முஸ்லிம் வியாபாரிகளுக்குண்டான முதல் அழகாக இருக்க வேண்டும்.

அவருடைய நம்பிக்கை முழுக்க அல்லாஹ்வின் மீது மட்டும் இருக்க வேண்டும். இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

நீங்கள் அல்லாஹ்வை முழுமையாக சார்ந்திருந்தால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கு உணவளிப்பான்.

அந்தப் பறவைகள் பசியோடு காலியான வயிற்றுடன் வெளியே செல்கின்றன, மாலையில் வரும்போது வயிறு நிரம்பி வருகின்றன.

அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 4164, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

எந்த ஒரு பறவையாவது பட்டினியாக திரும்புகிறது என்று எங்கேயாவது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்களா?கண்டுபிடிக்கவே முடியாது.

பறவைகள் அல்லாஹ்வின் பெயரை சொல்லி அதிகாலையில் புறப்படுகின்றன.தனது உணவுகளை தேடி அவை பயணிக்கின்றன.அவற்றில் எந்தவிதமான சிரமத்தையும் அவை பார்க்கவில்லை.

பிறகு,அவை மாலையில் திரும்ப வீட்டிற்கு வரும்பொழுது,அல்லாஹ்வை புகழ்ந்த வண்ணமாக வயிறு நிரம்ப வருகின்றன.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிகப்பெரிய ஒரு எதார்த்தத்தை நமக்கு உணர்த்துகிறார்கள்.

தவக்குல் -அல்லாஹ்வை சார்ந்திருப்பது என்பதற்கு அர்த்தம் என்னவென்றால்,சோம்பேறியாக இருந்து கொண்டு,உழைக்காமல் வேலைவெட்டி இல்லாமல் இருந்து கொண்டு,அல்லாஹ் கொடுப்பான் என்று நம்பி இருப்பதல்ல தவக்குல் என்பது.

அவன் கண்டிப்பாக பொய் சொல்கிறான். தன்னை ஏமாற்றி கொள்கிறான்.

உன் மீது உழைப்பை அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான் ஆகவேதான், அல்லாஹ்வுடைய தூதர் பறவைகளை உதாரணமாக சொல்கிறார்கள்.

பறவைகளுக்கு அல்லாஹ் உணவளிக்கிறான். அதற்காக அவை கூட்டில் இருப்பதில்லை. பறவைகள் உணவை தேடி காலையில் புறப்படுகின்றன. பிறகு, அவை வயிறு நிரம்ப திரும்புகிறது என்று சொன்னார்கள்.

நீங்கள் இப்படி அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து ரிஸ்க்கை தேடி பயணியுங்கள். உங்களது இல்லங்களை விட்டு வெளியேறுங்கள்.

எப்படி விவசாயி, விதையை விதைத்து விட்டு, அதிலிருந்து மகசூலை எதிர்பார்க்கிறான். எந்த ஒரு விவசாயவது பூமியில் எதையும் விதைக்காமல் அல்லாஹ் கொடுப்பான் என்பதாக தனது நிலத்திலிருந்து தானியங்கள் விளைவதை எதிர்பார்ப்பானா?

அப்படி எதிர்பார்ப்பவனை என்னவென்று நாம் சொல்லுவோம்?

அன்பானவர்களே! இப்படித்தான் இன்று சிலர், வேலைக்கு செல்ல மாட்டார்கள். தொழில் செய்ய மாட்டார்கள். வீட்டில் சோம்பேறியாக இருந்து கொண்டு, அல்லாஹ் ரிஸ்க்கை கொடுப்பான் என்று சொல்லுவார்கள். இவர்களும் அந்த விவசாயியும் ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ், இந்த தவக்குலைப் பற்றி கூறுகிறான்:

وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا

எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.) (அல்குர்ஆன் 65 : 3)

இந்த வியாபாரத்தை பற்றி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்லும்பொழுது, அவனுடைய கிருபை என்று சொல்கிறான்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:

وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ

வேறு சிலர்,அல்லாஹ்வின் அரு(ளாகிய பொரு)ளைத் தேடி, பூமியின் பல பாகங்களிலும் செல்ல வேண்டியதிருக்கும். (அல்குர்ஆன் 73 : 20)

இந்த வசனத்தில் முஃமின்களை, மூன்று வகையான கூட்டமாக அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான்.

முஃமின்களின் ஒரு கூட்டம், அவர்கள் இரவு நேரத்தில் தொழுது கொண்டிருக்கிறார்கள். இன்னொரு கூட்டம், அல்லாஹ்வுடைய பாதையில் ரிஸ்க்கை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும்போது, அவர்கள் அல்லாஹ்வுடைய அருளை தேடுகிறார்கள் குறிப்பிடுகின்றான்.

ஒருவர், ஹஜ்ஜுக்காக செல்கிறார். அந்த ஹஜ் உடைய பயணத்தில் அல்லது ஹஜ் முடித்ததற்கு பிறகு வியாபாரம் செய்யலாமா என்று சொன்னால், அவர் வியாபாரம் செய்வதை அல்லாஹ் அனுமதித்தது இருக்கிறான்.

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ

(ஹஜ்ஜூ பயணத்தின்போது) நீங்கள் (தொழில் செய்து) உங்கள் இறைவனுடைய அருளை(க் கொண்டு கிடைக்கும் லாபத்தை)த் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது.(அல்குர்ஆன் 2 : 198)

மேலும், அல்லாஹ் இந்த வியாபாரத்தைப் பற்றிக் கூறுகிறான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (9) فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ

நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜூமுஆ தொழுகைக்காக (அதான் சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!) (ஜூமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.(அல்குர்ஆன் 62 : 9,10)

வசனத்தின் கருத்து : இந்த ஜும்ஆ உடைய தினத்தில் ஜும்ஆ விற்காக அதான் சொல்லப்பட்டு விட்டால் நீங்கள் வியாபாரத்தை விட்டு விட்டு வாருங்கள்.

அல்லாஹ்வின் நினைவின் பக்கம் விரைந்து வாருங்கள் என்று கட்டளை இடுகின்ற அல்லாஹுதஆலா அதே நேரத்தில் தொழுகை முடிந்து விட்டால், அல்லாஹ்வின் அருளை –பொருளாதாரத்தை தேடுங்கள் என்று சொல்கிறான்.

ஒரு எதார்த்தமான ஒரு நடுநிலையான ஒரு நிதானமான தீனை அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கிறான்.

அன்பானவர்களே! இங்கே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பல உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றான். அல்லாஹ்வை நெருங்குவதற்கு வணக்க வழிபாடுகளை மட்டும் அல்லாஹ் நமக்குத் தரவில்லை.

நம்முடைய ரப் உடைய மிகப்பெரிய அருள், நீ வணங்கினால்தான் நான் உனக்கு கிடைப்பேன், எனது அன்பு உனக்கு கிடைக்கும் என்று அவன் விதியாக்கவில்லை.

வணக்க வழிபாட்டு நேரத்தில் என்னை வணங்கு, வழிபாட்டுக்கு என்று நான் உனக்கு நேரத்தை குறிப்பிட்டு உள்ளேன், அந்த நேரத்தை எனக்காக நீ ஒதுக்கி விடு, அந்த நேரத்தில் வேறு ஒரு வேலை நீ வைத்துக் கொள்ளாதே.

முஃமின்களை பற்றி அல்லாஹ் வர்ணிக்கும்போது சொல்கிறான்:

رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ

பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறிவிடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 24 : 37)

இதுதான் ஒரு முஃமினுக்குண்டான அழகு. அவருடைய உடல் உறுப்புகளால் அவன் தொழில் இருப்பான். அவளுடைய உள்ளம் அல்லாஹ்வுடன் தொடர்புடையதாக இருக்கும். அல்லாஹ்வை மறக்காது. அவருடைய உள்ளத்தில் துன்யா ஏறாது. அவன் உடலால் துன்யாவில் இருப்பான். ஆனால், அவனுடைய உள்ளம் அல்லாஹ்வோடு சம்பந்தப்பட்டிருக்கும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழகாக சொன்னார்கள்:

وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ

அவனுடைய உள்ளம் பள்ளியில் தொங்கவிடப்பட்டிருக்கும்.(1)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 660.

அவன் மனைவியோடு இருப்பான்.பிள்ளைகளோடு இருப்பான்.குடும்பத்தில் இருப்பான் தொழில் துறையில் இருப்பான்.ஆனால்,அவருடைய கல்புமஸ்ஜிதில் இருக்கும்.தொழுகை நேரம் வந்தவுடன்,இந்த துன்யாவை மறந்து விடுவான்.

இதுதான்,ஒரு தொழுகையை நிலை நிறுத்தக்கூடிய ஒரு முஃமின் உடைய அடையாளம்.உலகத்தின் எந்த லாபமும் உலகத்தின் எந்த நஷ்டமும் உலகத்தின் எந்த ஒரு சூழ்நிலையும் ஒரு முஸ்லிமை அவனுடைய தொழுகையிலிருந்து திருப்பி விடாது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இபாதத்துக்கு என்று நேரத்தை விதித்து விட்டான்.அந்த நேரத்தில் இபாதத்தை தவிர, வேறு எதுவும் செய்யக் கூடாது.

அதற்குப் பிறகு, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த நேரத்தை உங்களுக்கென்று ஒதுக்கி விடுகின்றான்.மீதி உள்ள நேரத்தை உங்களுக்கு என்று ஓய்வுக்காக, மனைவி மக்களுக்காக, உங்களுடைய தொழில் துறைக்காக, வாழ்வாதாரத்திற்காக, அல்லாஹ் உங்களுக்கு அனுமதி மட்டும் அளித்ததில்லை, பல நேரங்களில் அதை கடமையாகவும் ஆக்கியிருக்கின்றான்.

அதற்காக நமக்கு நன்மையும் தருகிறான். எப்படி தொழுகையில் நின்று அல்லாஹ்வை வணங்கி நன்மையை தேடுகின்றோமோ, அதுபோன்று வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு உழைத்து உழைக்கக்கூடிய உழைப்பிற்கு, அதில் நாம் படக்கூடிய சிரமங்களுக்கு நன்மைகளை அல்லாஹ் வாக்களிக்கின்றான்.

இதற்குமேல் அல்லாஹ்வுடைய அருளை எங்கிருந்து நாம் வர்ணிக்க முடியும்? யோசித்துப் பாருங்கள்.

உமர் இப்னு கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக அழகாக இந்த வசனத்திற்கு விளக்கம் சொல்கிறார்கள்;

எனக்கு மரணம் இந்த நிலையில் ஏற்பட வேண்டும் என்று நான் விரும்பினால், அதில் முதலாவதாக, அல்லாஹ்வுடைய பாதையில் ஜிகாத் செய்துகொண்டிருக்கும் போது எனக்கு மரணம் வரவேண்டும் என்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்.

இரண்டாவதாக, நான் எனது குடும்பத்திற்காக, எனது பிள்ளைகளுக்காக, வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டிருக்கும்போது, ஹலாலான வியாபாரத்தை செய்து கொண்டிருக்கும் போது எனக்கு மரணம் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

தவக்குல் என்பதற்கு தப்பான அர்த்தத்தை கொடுத்து, கல்வியின் மீது ஆர்வம் இல்லாதவர்களாக, தொழில் மீது ஆர்வம் இல்லாதவர்களாக, வியாபாரத்தின் மீது நாட்டமில்லாதவர்களாக, உழைப்பின் மீது ஈடுபாடு இல்லாதவர்களாக, ஒரு கூட்டத்தை ஒரு கூட்டம் உருவாக்கி கொண்டிருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஒரு முஃமின், தன்னுடைய குடும்பத்திற்காக உணவளிக்க வேண்டும் என்று கவலைப் படுகின்றான். இந்த கவலைக்காக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்கிறான்.

ஒரு முஸ்லிம், வாழ்வாதாரத்தை தேடவேண்டும். சோம்பேறியாக இருக்கக் கூடாது. அதற்காக கஷ்டப்படுவது மார்க்கப் பற்றுக்கு முரணானது அல்ல.

இன்று சிலர், தக்வாவிற்கு முரணானதாக வியாபாரத்தை எண்ணி வைத்திருக்கிறார்கள். ஒரு மார்க்க அறிஞர் வியாபாரம் செய்தால், அதை தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள்.

இபாதத்தின் அர்த்தம் வியாபாரம் செய்யாமல் இருத்தல் அல்ல. கல்வியின் அர்த்தம் வியாபாரம் செய்யாமல் இருத்தல் அல்ல.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களை விடவா, நாம் இல்மில் உயர்ந்து விட்டோம்? தவக்குலில் உயர்ந்து விட்டோம்? அவர்களை விடவா இபாதத்தில் உயர்ந்து விட்டோம்?

அபூபக்ர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களை விட,இபாதத்தில் இல்மில் ஈமானில் தக்வாவில் தவக்குலில் ஒரு உயர்ந்த முஃமினை தேட முடியுமா?

இந்தப் பக்கம் கிலாஃபத் கொடுக்கப்பட்டது. அடுத்த நாள் கிஃலாபத் உடைய வேலைகளைப் பார்த்துவிட்டு, தன்னிடத்தில் இருந்த சில வியாபார துணிமணிகளை எடுத்துக்கொண்டு கடைத்தெருவிற்கு செல்கிறார்கள்.

ஹலாலான ரிஸ்க்கை தேடி வியாபாரத்திற்காக. உமர் அவர்கள் பார்த்துவிட்டு கலிஃபா எங்கே போறீங்க? என்று கேட்கிறார்கள்.

என்னுடைய குடும்பத்தை நான் எவ்வாறு கவனிப்பேன்? அவர்களுக்கு நான் உணவளிக்க வேண்டாமா?

பிறகு, உமரு ரலி உடைய மஷூராவின் படி, கலிஃபாவிற்கு ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. கலிஃபாவிற்குண்டான மாத சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.

அன்பானவர்களே! தவக்குல் உடைய அர்த்தம், வியாபாரம் செய்யாமல் உழைக்காமல் இருப்பது என்று சொன்னால், அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய செயலுக்கு நாம் என்ன விளக்கம் சொல்லப்போகிறோம்?

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு மிக அழகாக தெளிவாக புரிந்து வைத்திருந்தார்கள். தவக்குல் உடைய அர்த்தம் வியாபாரத்தை விட்டுவிட்டு தொழில்துறையை விட்டுவிட்டு உழைப்பை விட்டுவிட்டு மஸ்ஜிதில் உட்கார்ந்துகொண்டு இபாதத் செய்வதோ, அல்லது மக்கள் தருவார்கள் என்று நம்பி இருப்பதோ அல்ல.

எனவேதான், அந்த வியாபாரத்தை தேடி அவர்கள் சென்றார்கள்.

இந்த வியாபாரம் அல்லாஹ்விற்கு பிரியமான ஒன்று என்பதை நாம் புரிய வேண்டும். அதனால்தான் அதற்காக சிரமப்படும் பொழுது அல்லாஹு தஆலா பாவத்தை மன்னிக்கிறான்.

அந்த வியாபாரம் செய்யக்கூடிய கூட்டத்தை, இபாதத்தில் இருக்கின்ற கூட்டத்தோடு, ஜிஹாதில் இருக்கின்ற கூட்டத்தோடு அல்லாஹ் சொல்கிறான்.

அத்தோடு குறைஷிகளை பற்றி அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்.

குறைஷிகளுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைக்கும்போது,அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு கொடுத்த நிஃமத்குறித்து சொல்லிக் காட்டுகின்றான்.

குறைஷிகள்! உங்களுடைய வர்த்தகத்திற்காக கோடைகாலத்திலும் குளிர்காலத்திலும் நீங்கள் பயணம் செய்தீர்கள் அல்லவா? அந்தப் பயணத்தை உங்களுக்கு எளிதாக்கி கொடுத்தவன் யார்? எனவே, அந்த ரப்பை நீங்கள் வணங்க வேண்டும்.

لِإِيلَافِ قُرَيْشٍ (1) إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ (2) فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ (3) الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ

குறைஷிகளுக்கு (பிரயாணத்தின் மீது) விருப்பமுண்டாக்கி, குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொள்ளும்படி செய்ததற்காக, (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும். அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகிறான். (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான். (அல்குர்ஆன் 106 : 1-4)

அன்பானவர்களே! ரிஹ்லா என்றால் பயணம். அதுவும் நீண்ட தூர பயணம் செய்வதைத்தான் ரிஹ்லா என்று சொல்வார்கள்.

அல்லாஹு தஆலா கோடைகாலத்திலும் குளிர்காலத்திலும் நீங்கள் தொழிலுக்காக பயணம் செய்வதை அல்லாஹ் உங்களுக்கு லேசாக்கி கொடுத்தது மட்டுமல்ல, அந்தப் பயணத்தின் மீது உங்களுக்கு விருப்பத்தை ஏற்படுத்தினான்.

அப்படித்தான் ஒவ்வொரு நல்ல, உணர்வுள்ள சோம்பேறித்தனம் இல்லாத, உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உள்ள, ஒவ்வொரு சராசரி மனிதனுடைய உள்ளத்திலும் தொழிலுக்காக வியாபாரத்திற்காக பயணம் செய்வதை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுக்கு விருப்பமாக்கி வைத்திருக்கின்றான்.

எனவேதான், நம்மால் பயணம் செய்ய முடிகிறது. நம்முடைய குடும்பத்தை விட்டு, நம்முடைய சௌகரியங்களை விட்டுவிட்டு, வெளி ஊருக்கு வியாபாரத்திற்காக செல்வது நமக்கு ஏன் இலகுவாகியது என்று சொன்னால், அது அல்லாஹ்வால் நமக்கு இலகுவாக்கப் பட்டுள்ளது.

ஆகவே, அப்படி செல்வது நமக்கு லேசாகவும் விருப்பமானதாகவும் இருக்கிறது. இந்த வசனத்திலிருந்து நாம் உணரக்கூடிய விஷயம் என்னவென்று சொன்னால், இது அல்லாஹ்வுடைய நிஃமத் என்பதின் அடிப்படையிலேயே அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

வியாபாரத்திற்காக பயணம் செய்வது, அல்லாஹ்வுடைய அருளுக்கு முரண்பட்ட ஒன்றாக இருந்திருந்தால், குறைஷிகளுக்கு அந்த விஷயத்தை அல்லாஹ் கண்டிப்பாக சொல்லி இருக்க மாட்டான்.


வியாபாரம் செய்பவர்கள் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான குணம், உண்மையான வியாபாரம், பொய் பேசாத வியாபாரம்.

அன்று ஒரு காலம் இருந்தது பாய் ஏமாற்ற மாட்டார் அளவில் மோசடி செய்ய மாட்டார் உண்மைத்தன்மை இருக்கும் என்று ஆனால் இன்று, முஸ்லிம்களே பொய் சொல்கிறார்கள். ஹராமான செத்த பிராணிகளை விற்கிறார்கள் இது தான் மிகப்பெரிய வேதனை.மறுமையை நம்பாத, குர்ஆன் சுன்னாவை நம்பாத, இந்த மார்க்கத்திற்கு வெளியில் இருக்கின்ற ஒரு காஃபிர் பேசுகிறான் என்று சொன்னால், அது வேற விஷயம்.

இன்று, காபிர்களே உண்மையாக வியாபாரம் செய்ய வேண்டும், அப்போதுதான் வியாபாரத்தில் நிலைத்திருக்க முடியும் என்று முன்னேறிக் கொண்டிருக்கின்ற காலத்தில் முஸ்லிம்கள் பொய் சொல்லி வியாபாரம் செய்வதை பார்க்கும்போது மனம் வேதனைப் படுகிறது.

வியாபாரத்தில் கிடைக்கும் சம்பாத்தியம் மிகத் தூய்மையான சம்பாத்தியம். எனவே, அந்த வியாபாரி பொய் பேசாமல் இருக்க வேண்டும்; நம்பிக்கைக்கு மாற்றம் செய்யாமல் இருக்க வேண்டும்; வாக்குக்கு முரணாக நடக்காமல் இருக்க வேண்டும்.

அவர்கள் விற்கும் போது மட்டமானதை விற்க்கக்கூடாது. அதுபோன்று அவர்கள் விற்கும் போது வாங்கக் கூடியவர்களுக்கு மிக அதிகமாக விலையை உயர்த்தி வாங்க மாட்டார்கள்.

அன்பானவர்களே! இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் நமக்கு அழகாக சொன்னார்கள். வியாபாரிகளின் சம்பாத்தியம், சுத்தமான சம்பாத்தியம். அந்த வியாபாரிகள் போய் பேச மாட்டார்கள். நம்பிக்கைக்கு மாற்றமாக நடக்க மாட்டார்கள். வாக்கை மீற மாட்டார்கள்.

அவர்கள் பிறரை வற்புறுத்தி அவர்களுடைய பொருளை மிகக் குறைந்த விலைக்கு வாங்கவும் மாட்டார்கள்.‌ அவர்கள் விற்கும்போது அநியாயமான விலைக்கு விற்கவும் மாட்டார்கள். அவர்கள் கொடுக்க வேண்டிய ஹக்கை அழகான முறையில் கொடுத்துவிடுவார்கள்.

இன்னும் வியாபாரம் தொடர்பான நிறைய விஷயங்களை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்ப்போம். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, நமது சொல்லிலும், செயலிலும், மேன்மை உடையவர்களாக, அல்லாஹ்வை அஞ்சி, ஹலாலான வியாபாரத்தைசெய்யக்கூடிய நல்ல முஃமின்களாக என்னையும், உங்களையும் ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

Popular posts from this blog

ஈஸா (அலை) செய்த அற்புதங்களும் நாம்பெறவேண்டிய படிப்பினைகளும். 23-12_22

குர்பானி ஏற்படுத்தும் மாற்றங்களும்,அரஃபா நாள் நோன்பும், அய்யாமுத் தஷ்ரீக் தக்பீரும்… 13-06-2024

பைத்துல் முகத்தஸ்